வெடிகுண்டு வீசி ரவுடிகள் சண்டை-சென்னையில் பரபரப்பு
சென்னை: சென்னையை அடுத்துள்ள எண்ணூரில் ரவுடிகள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். அப்போது சரமாரியாக நாட்டு வெடிகுண்டுகளையும் வீசிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையை அடுத்துள்ள எண்ணூர் சிவகாமி நகரைச் சேர்ந்தவர் மாதவன். பிரபல ரவுடியான இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த தனசேகரன் என்ற ரவுடிக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
சமீபகாலமாக சென்னையில் ரவுடிகள் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுவருவதால், தனசேகரன் வெளியூரில் பதுங்கியுள்ளார். எப்போதாவது எண்ணூருக்கு வரும் தனசேகரன், இன்று உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக வந்திருந்தார்.
அவருடன் கூட்டாளிகளான பாலாஜி, செந்தில், ஒசாமா ஆகியோரும் உடன் வந்துள்ளனர். இதே திருமணத்திற்கு மாதவன் தன் கூட்டாளிகள் முத்துக்குமார், சிவக்குமார், கோபால் ஆகியோருடன் வந்திருந்தார்.
அப்போது இரு தரப்பினருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு கண் இமைக்கும் நேரத்திற்குள் கலவரமாக மாறியது.
இரு தரப்பு ரவுடிகளும் ஒருவரையொருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். இதற்கிடையில் தனசேகர் 2 கையெறி குண்டுகளை மாதவன் மீது வீசியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
மாதவன் கோஷ்டியைச் சேர்ந்த முத்துக்குமார், கோபால், சிவக்குமார் ஆகிய மூவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. காயம் அடைந்த ரவுடிகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கலவரத்தால் திருமண வீட்டிற்கு வந்தவர்கள் நாலாப்புறமும் சிதறி ஓடினர். இச்சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலவரத்திற்கான காரணமான தனசேகர் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications