பெண்ணிடம் கத்தி முனையில் 45 பவுன் நகை பறிப்பு
சென்னை: சென்னை அருகே அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையன், பெண்ணின் தொண்டைக்குள் கையை விட்டும், கத்தியைக் காட்டி மிரட்டியும் 45 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளான்.
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் அனுமான் காலனியைச் சேர்ந்த தொழிலதிபர் தியாகராஜன். பெயிண்ட் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சாந்தா (55).
இவர் நேற்று இரவு 9 மணியளவில் காரில் தி.நகரிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
காரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றவுடன் ஒரு நபர் வீட்டு வாசல் பெல்லை அடித்துள்ளான். குடிநீர் கேன் கொண்டு வந்துள்ளதாக அவன் கூறவே சாந்தா கதவைத் திறந்தார்.
இதையடுத்து அதிரடியாக வீட்டுக்குள் புகுந்த அவன் சாந்தாவின் வாயில் இரண்டு விரல்களை விட்டு தொண்டை வரை கொண்டு சென்றான். இதனால் சாந்தாவால் கத்த முடியவில்லை. மேலும் இன்னொரு கையால் அவரது கழுத்தில் கத்தியை வைத்து நகைகளை கழற்றியுள்ளான்.
மேலும் பீரோவை திறக்க வைத்து அதிலிருந்த நகைகளையும் அள்ளிக் கொண்டு, சாந்தாவை ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு
தப்பி விட்டான். கொள்ளை போன நகைகளின் எடை 45 பவுன் ஆகும்.
இந்த கொள்ளைச் சம்பவம் அனுமான் காலனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்பகுதியில் அடிக்கடி சங்கிலி பறிப்பு, திருட்டு உள்ளிட்டவை நடந்து வருவதாகவும், போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் பொதுமக்கள் குமுறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications