25ம் தேதி கூடுகிறது நாடாளுமன்றம்
பல்வேறு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 25ம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பான அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரை நிகழ்த்துவார்.
26ம் தேதி ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்கிறார். மக்கள் பட்ஜெட்டாக இது இருக்கும் என்று ஏற்கனவே லாலு அறிவித்துள்ளதால் பல்வேறு சலுகைகள், புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு இருக்கும் எனத் தெரிகிறது.
29ம் தேதி 2008-09ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்வார். பட்ஜெட்டில் வரிச் சலுகைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் கூட்டத் தொடர் 3 மாதங்களுக்கு நடைபெறும் எனத் தெரிகிறது. பல்வேறு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் கூடுவதால் வழக்கம் போல இந்தக் கூட்டத் தொடரும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.