கட்டபொம்மன் வாரிசுகளின் நிலங்கள் ஆக்கிரமிப்பு: விசாரிக்க குழு
தூத்துக்குடி: வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுகளுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தை அதிமுக எம்.எல்.ஏ ஆக்கிரமித்துள்ளது குறித்து விசாரிக்க ஆர்.டி.ஓ. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1976ல் கட்டபொம்மன் வாரிசுகளுக்கு அரசு இலவசமாக நிலம் வழங்கியது. அந்த நிலங்கள் பஞ்சாலங்குறிச்சியை அடுத்துள்ள புற்றுமுருகன் கோவில், வெங்கடசாமிபுரம், வெள்ளாரம், இந்திரா நகர் பகுதிகளில் உள்ளது.
ஆனால் கடந்த 1995ம் ஆண்டில் இருந்து இந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு சரள் மண் குவாரிகளாகவும், பெட்ரோல் பங்குகளாகவும் செயல்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தது.
சமீபத்தில் இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ஒட்டப்பிடாரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏதான் இவற்றை அடிமாட்டு விலைக்கு வாங்கி அதை ஆக்கிரமித்திருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இது குறித்து விசாரிக்க கோவில்பட்டி ஆர்டிஓ சுடர்மணி பாண்டியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டபொம்மன் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படட நிலங்களின் ஓவ்வொரு சர்வே எண்ணையும் எடுத்து விவரங்களை திரட்ட உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பழனியாண்டி கூறுகையில்,
இதில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்தால், நிலங்களை விற்க எந்த அதிகாரியாவது துணை போயிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அபகரிக்கப்பட்ட நிலத்தில் குவாரிகள் இருப்பது தெரியவந்தால் அவற்றின் லைசென்ஸ் ரத்து செய்யப்படுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.