எம்.ஜி.ஆர் படம் கிழிப்பு: போராட்டம் நடத்திய தேமுதிகவினர் கைது
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் தேமுதிக பேனரில் எம்ஜிஆர் படம் கிழிக்கப்பட்டதை எதிர்த்து அக்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். மேலும் அதிமுக விளம்பரங்களில் போஸ்டர்களை ஒட்டினர். இதையடுத்து 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
காயல்பட்டிணத்தில் கடந்த 7ம் தேதியும், தூத்துக்குடியில் 8ம் தேதியும், தேமுதிக பேனரில் இடம் பெற்றிருந்த எம்ஜிஆர் படம் கிழிக்கப்பட்டிருந்தது.
இதனால் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கோமதி கணேசன் தலைமையில் அக்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் தேமுதிகவினரை சமாதானம் செய்த பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் திருச்செந்தூரிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு விஜயகாந்தை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனரில் எம்ஜிஆர் படம் கிழிக்கப்பட்டிருந்தது. திருச்செந்தூர் நகரின் மையப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் படத்தை சில மர்ம நபர்கள் கிழித்ததால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையறிந்த மாவட்ட செயலாளர் கோமதி கணேசன் தலைமையில் தேமுதிக தொண்டர்கள் நேற்று காலை திருச்செந்தூரில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரத்தின் மீது சிறிய
போஸ்டர்களை ஓட்டினர்.
அதில் அதிமுக மாவட்ட செயலாளரும், எம்எல்ஏமான அனிதாராதாகிருஷ்ணனை கண்டித்து வாசகங்கள் இருந்தன. இதனால் போலீசார் தேமுதிகவின் மாவட்டச் செயலாளர் உட்பட 24 பேரை கைது செய்தனர்.