நாளை அதிமுக செயற்குழு-பொதுக்குழு!

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கும் இந்தக் கூட்டத்துக்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை வகிக்கிறார். நீண்டகாலம் ஒதுக்கி வைக்கப்பட்டு சமீபத்தில் திடீர் சாப விமோச்சனம் பெற்று மீண்டும் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாகியுள்ள முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆலோசனை உரை ஆற்றுகிறார்.
பொருளாளர் பன்னீர்செல்வம் கட்சியின் வரவு-செலவு கணக்கு விபரங்களை தாக்கல் செய்கிறார். பின்னர் ஜெயலலிதா சிறப்புரையாற்றவுள்ளார்.
இக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் 3,200 பேருக்கு தனித்தனியே அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இதில் பாஜகவுடன் கூட்டணி, தமிழக அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்துவது ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளன. மேலும் சேது சமுத்திர திட்டம், விலைவாசி, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, விடுதலைப் புலிகள் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து தீர்மானங்கள் கொண்டு வரப்படவுள்ளன.
குறிப்பாக பாஜவுடன் கூட்டணிக்கு நிர்வாகிகள் எந்த அளவுக்கு ஆதரவுடன் உள்ளனர் என்பதை ஜெயலலிதா பல்ஸ் பார்ப்பார் என்று தெரிகிறது. நிர்வாகிகள் மன ஓட்டம் எப்படி இருந்தாலும் தேர்தல் கூட்டணி தொடர்பாக ஜெயலலிதாவுக்கு முழு அதிகாரம் வழங்கி செயற்குழு, பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றும் என்பது மட்டும் நிச்சயம்.
கூட்டம் முடிந்தவுடன் அந்த மண்டபத்திலேயே அதிமுகவினருக்கு மதிய விருந்து வழங்குகிறார் ஜெயலலிதா. கட்சி நிர்வாகிகளுடன் ஜெயலலிதாவும் கூடவே சசிகலாவும் விருந்தில் பங்கேற்க உள்ளனர்.
செயற்குழு, பொதுக்குழு கூட்டத்துக்கு வரும் ஜெயலலிதாவை வரவேற்க அதிமுக தடபுடல் ஏற்பாடுகளை செய்துள்ளது. கோயம்பேட்டில் இருந்து வானகரம் வரை சாலையின் இரு புறமும் வரவேற்பு வளைவுகள், பேனர்கள், கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. ஏனோ கட்-அவுட்களைக் காணவில்லை.
மதுரவாயல் மேம்பாலம் அருகே ஜெயலலிதாவை மேளம், நாதஸ்வரம், இன்னிசை, பம்பாய் நடனம், கேரள பெண்களின் பேண்டு வாத்திய முழக்கத்துடன் வரவேற்கவுள்ளனராம் அதிமுகவினர்.
பின்னர் 60 குதிரைகள் அணிவகுக்க ஜெயலலிதா அழைத்து செல்லப்படவுள்ளார். திருமண மண்டப வாயிலில் 2 யானைகள் மாலை அணிவித்து ஜெயலலிதாவை வரவேற்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications