அதிகாரிகளின் அலட்சியம் - தாமதமாகும் பயணம்
செங்கோட்டை: மதுரை வணிக பிரிவிலிருந்து முன்பதிவு பட்டியல் அனுப்புவதில் அலட்சியம் காட்டப்பட்டு வருவதால் செங்கோட்டையிலிருந்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னைக்குத் தொடங்கியுள்ள ரயில் பயணம் தாமதமாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு 10 ஆண்டுகளுககு பின்பு அகல ரயில் பாதையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து கடந்த 7ம் தேதி தொடங்கியது. இந்த ரயிலில் செங்கோட்டை முதல் திருச்சி வரை உள்ள பயணிகளுக்கு மிகவும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தினமும் மதுரை வணிக பிரிவிலிருந்து முன்பதிவு பட்டியல் அனுப்புவதில் அலட்சியம் காட்டப்பட்டு வருவதாக பயணிகள், ரயில்வே ஊழியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தினமும் செங்கோட்டையிலிருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் இநத ரயில் கடந்த இரு தினங்களாக 10 முதல் 18 நிமிடம் தாமதமாக புறப்பட்டு செல்வதாகவும், முன்பதிவு பட்டியல் மதுரையிலிருநது ஆன்லைனில் அனுப்புவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்படுவதால் முன்பதிவு செய்த பயணிகள் பட்டியல் கோச்களில் ஓட்டப்படாமல் இருப்பதால் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
நேற்று இரவு 6.30 மணி முதல் 6.50 வரை முன் பதிவு பட்டியல் வராத காரணத்தினால் பயணிகள் திரண்டு முன்பதிவு அலுவலகத்தை முற்றுகையிடும் நிலையும் ஏற்பட்டது.
அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு தாமதத்துடன் புறப்பட்டு சென்றதும் குறிப்பிடத்தக்கது.