சேது திட்டத்தை ரத்து செய்ய சு.சுவாமி கோரிக்கை
டெல்லி: சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமரை வலியுறுத்தும்படி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை நேரில் சந்தித்து சுவாமி மனு கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அரசியல் சட்டத்தின் 78வது பிரிவைப் பயன்படுத்தி, சேது சமுத்திரத் திட்டம் குறித்த ஆவணங்களை வரவழைத்து அதை குடியரசுத் தலைவர் ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும் ராமர் பாலத்தை இடிக்காமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேறு வழி இல்லாவிட்டால் இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என பிரதமருக்கு அவர் அறிவுறுத்த வேண்டும்.
இந்தத் திட்டத்தால் தேசிய பாதுகாப்புக்கு ஊறு ஏற்படும். மேலும், பொருளாதார ரீதியாகவும் இந்தத் திட்டத்தால் எந்தப் பலனும் இல்லை.
ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த அபிடவிட்டில், மக்களின் மனங்களை புண்படுத்தும் வகையில், விலங்கு வதைத் தடைச் சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று தமிழக அரசு கூறியுள்ளது.
ராமர் பாலத்தை இடிக்கலாம் என தமிழக அரசு கூறினால் அதனாலும் பல கோடி இந்துக்களின் மனங்கள் புண்படும். ஜல்லிக்கட்டுக்கு மட்டும் மக்கள் மனம் புண்படும் என்று கூறிய தமிழக அரசு இப்போது, கோடிக்கணக்கானோரின் மனங்கள் புண்படும் என்பதை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ள மறுக்கிறது.
ராமர் பாலத்தை இடித்தால் மக்களின் மத உணர்வுகள் புண்படும். எனவே அதை இடிக்கக் கூடாது என்று அகில இந்திய இமாம்கள் அமைப்பும் கூறியுள்ளது. அதையும் குடியரசுத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications