காதல்: போலீஸ்காரருடன் ஏட்டு மகள் ஓட்டம்
ஆரல்வாய்மொழி: போலீஸ் ஏட்டு மகள் தனது காதலனான போலீஸ்காரருடன் ஓடிவிட்டார். ஆனால், மகளை போலீஸ்காரர் கடத்திவிட்டதாக ஏட்டு புகார் கொடுத்துள்ளார்.
சென்னை கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் கைலாசநாதனின் மகள் ராஜலட்சுமி (வயது 26). இவர் தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
கைலாசநாதன் மகள் ராஜலட்சுமியுடன் தனது சொந்த ஊரான பாளையங்கோட்டைக்கு வந்தார். ஆனால், பஸ் நிலையத்தில் திடீரென ராஜலட்சுமி மாயமாகி விட்டார்.
இது குறித்து பாளையங்கோட்டை போலீசில் கைலாசநாதன் கடத்தல் புகார் கொடுத்தார். இந் நிலையில் குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஒரு காரை மடக்கினர். அதில் ராஜலட்சுமி இருந்தார்.
ராஜலட்சுமியிடம் விசாரணை நடத்தியபோது, அவரை கடத்தியது அவரது காதலரான சக்திவேல் (27) என்று தெரியவந்தது. இவரும் போலீஸ்காரர் தான். சென்னை ஆவடி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.
சக்திவேலுவும், ராஜலட்சுமியும் பச்சையப்பன் கல்லூரியில் படித்தவர்கள். ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். ஆனால், இந்தக் காதலை ராஜலட்சுமியின் தந்தை கைலாசநாதன் ஏற்கவில்லை.
இந் நிலையில் சக்திவேலும் ராஜலட்சுமியும் 11ம் தேதி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். இந்த விவரம் தெரியவந்ததையடுத்து திருமணத்தைத் தடுக்கவே மகளை பாளையங்கோட்டைக்கு அழைத்துச் சென்றுள்ளார் கைலாசநாதன்.
இந்த விவரத்தை ராஜலட்சுமி எஸ்.எம்.எஸ். மூலம் சக்திவேலுக்கு தெரிவிக்கவே நண்பருடன் சக்திவேல் காரில் வந்து ராஜலட்சுமியை பாளையங்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து அழைத்துச் சென்றுள்ளார்.
இதைத் தான் தனது மகள் கடத்தப்பட்டதாக கைலாசநாதன் புகார் தந்துள்ளார்.
ராஜலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தானே விரும்பி சக்திவேலுடன் சென்றதாகவும், தன்னை அவர் கடத்தவில்லை என்றும் கூறிவிட்டார். மேலும் பெற்றோருடன் போகவும் மறுத்துள்ளார்.
ஆனால், இதை கைலாசநாதன் ஏற்க மறுத்து வருவதால் போலீசார் குழம்பிப் போயுள்ளனர்.