போலீஸ் நிலையத்தில் 'பாரா' காவலர்கள் வெளியே செல்ல தடை
நெல்லை:இரவில் போலீஸ் நிலையங்களில் பணியில் இருக்கும் பாரா காவலர்கள் (காவல் நிலைய பாதுகாப்புப் பணி) வெளியே செல்லக் கூடாது என்று நெல்லையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 8ம் தேதி ஒரு கும்பல் நுழைந்து கதவுகளை உடைத்து உள்ளே இருந்த துப்பாக்கிகள், வாக்கி டாக்கிகளை திருடி சென்றது.
போலீஸ் நிலையத்தில் இரவில் பணியிலிருந்த ஒரு போலீஸ்காரர் தூங்கியதும் மற்றவர்கள் வெளியே போய்விட்டதுமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பாராவில் உள்ளவர்கள் வெளியே போக கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழகம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களின் தகவல் பலகையிலும் உத்தரவு ஒட்டப்பட்டுள்ளது.
ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் போலீஸார் பற்றாக்குறையில்தான் உள்ளனர். இருக்கின்ற காவலர்களும் பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் பெரும்பாலான காவல்நிலையங்களில் பாரா காவலர்களே நிற்பதில்லை.
முக்கிய போலீஸ் நிலையங்களை தவிர ஏனைய போலீஸ் நிலையங்களில் இரவில் பாராவுக்கு யாரும் நிற்பதில்லை. மேலும் பகலில் வேலை செய்த காவலரை இரவில் கூடுதல் பணிச் சுமையாக பாராவுக்கு நிறுத்துவதா என்று காவலர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.