திருச்சானூர் கோவில் ரத சேவையில் வாகனம் சரிந்து அர்ச்சகர் காயம்-பரிகார பூஜை
நகரி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நடந்த சர்வ பூபால வாகன சேவையின்போது வாகனத்தை சுமக்கும் மரக்கட்டை உடைந்து வாகனம் சரிந்தது. இதில் அர்ச்சகர் காயமடைந்தார். இதையடுத்து கோவிலில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ரத சப்தமி விழா நடந்தது. இதையொட்டி சர்வ பூபால வாகன சேவை நடந்தது. அப்போது வாகனத்தை சுமக்கும் மரக்கட்டை திடீரென உடைந்தது. இதனால் வாகனம் ஒருபுறமாக சரிந்து அதில் அமர்ந்திருந்த அர்ச்சகர் வேணு கீழே விழுந்தார்.
படுகாயமடைந்த அவர் திருப்பதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தையடுத்து உடனடியாக வாகன சேவை ரத்து செய்யப்பட்டது. விழா நாளில் வாகனம் சரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இச் சம்பவத்தையடுத்து கோவிலில் பரிகார பூஜைகளும் பரிகார ஹோமமும் நடத்தப்பட்டன.
வாகனத்தின் கட்டை உடைந்தது தொடர்பாக 2 ஊழியர்களை திருப்பதி தேவஸ்தானம் சஸ்பெண்டு செய்துள்ளது.