தமிழக பால் வியாபாரிகள் போராட்டம் ஒத்திவைப்பு!
ஈரோடு: தமிழகத்தில் பால் நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பணியாளர் இணையம் ஆகியவற்றின் பொதுக் குழுக் கூட்டம் ஈரோட்டில் சங்க இணைச் செயலாளர் ராமசாமி தலைமையில் நடந்தது.
இதையடுத்து சங்கத் தலைவர் செங்கோட்டுவேல் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழகம் முழுவதும் சுமார் 700 பால் கூட்டுறவு சங்கங்களில் 7 லட்சத்திற்கு மேல் உறுப்பினர்கள் உள்ளனர். தினமும் 18 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
தற்போது ஆவின் நிர்வாகம், பசும் பாலுக்கு ரூ.12ம், எருமைப் பாலுக்கு ரூ.14ம் வழங்கி வருகிறது. ஆனால் தனியார் நிறுவனங்கள் இதை விட அதிகமாக தருகின்றன.
இந் நிலையில் ஆவின் நிறுவனம் எங்களிடம் பால் கொள்முதல் செய்வதைக் குறைந்து விட்டது. இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
எனவே ஒரு லிட்டர் பசும் பாலுக்கு ரூ.17ம், எருமைப்பாலுக்கு ரூ.24ம் ஆவின் நிர்வாகம் உயர்த்தி தரவேண்டும் .
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி எங்களது சங்கம், மற்றும் சக தோழமை சங்கங்கள் சார்பில் பால் கொள்முதல் நிறுத்த போராட்டம் அறிவித்திருந்தோம்.
ஆனால் கோரிக்கை நிறைவேற ஒரு மாத கால அவகாசம் தேவை என்று பால் வளத்துறைத்துறை அமைச்சர் மதிவாணன் கேட்டுக் கொண்டதால் இந்த போராட்டம் மார்ச் 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications