தொடர்ந்து சேதப்படுத்தப்படும் இமானுவேல் சேகரன் கல்லரை
மதுரை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சதி நடப்பதாக புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு வரும் 24ம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அகில இந்திய தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
1957ம் ஆண்டில் சமுதாய விடுதலைக்காக பாடுபட்ட தியாகி இமானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்டார். அவரது நினைவாக பரமக்குடியில் எழுப்பட்ட கல்லறை கடந்த 3 ஆண்டுகளாக சேதப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு முறை கூட உண்மையான குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட மீண்டும் அதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. இதில் மிகப் பெரிய அரசியல் பின்னனி உள்ளதாக கருதுகிறேன். இது குறித்து விசாரிக்க விசேஷ புலனாய்வுக் குழுவை நியமிக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க பெரிய சதி நடக்கிறது. இதற்கு தமிழக அரசு இடம் கொடுக்க கூடாது.
தாழ்த்தப்பட்ட மாணவர்கள் உயர் கல்வி பெறுவதற்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு பிளஸ் 2 வகுப்பில் 60 சதவீத மதிப் பெண்கள் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதை ரத்து செய்யக் கோரி மத்திய சமூக நலத்துறை அமைச்சர் மீரா குமாரியிடம் வலியுறுத்தியுள்ளேன்.
இதில் அரசு மவுனம் காத்தால் அகில இந்திய அளவில் போராட்டம் வெடிக்கும் என்றார்.