பெங்களூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையம் சூறை- கன்னட அமைப்பினர் தாக்குதல்
பெங்களூர்: பெங்களூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தை கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்கி, சூறையாடினர். கம்ப்யூட்டர்கள் உடைத்து நொறுக்கப்பட்டன. இதனால் ரிசர்வேசன் ரத்து செய்யப்பட்டது. ஆனால், போலீசார் அவர்களைத் தடுக்காமல் சும்மா வேடிக்கை பார்த்தனர்.
கர்நாடகத்தில் ரயில்வே குரூப் டி பிரிவு வேலை வாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கர்நாடக ரக்ஷண வேதிகே என்ற கன்னட அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. ஆனால், இந்தக் கோரிக்கையை ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதவ் ஏற்க மறுத்துவிட்டார்.
இது இந்தியா, இந்த நாட்டைச் சேர்ந்த யாரும் ரயில்வேயில் எந்த மாநிலத்தில் இருந்தும் பணியில் சேரலாம் என்று கூறிவிட்டார். இதனால் அவருக்கு எதிரான போராட்டங்களை கன்னட அமைப்புகள் நடத்தி வருகின்றன. 4 நாட்களுக்கு முன்பு லாலு கர்நாடகம் வந்த போது அவரை சூழ்ந்து கொண்டு அவருக்கு எதிராக போராட்டமும் நடத்தினர்.
இதனால் எரிச்சலான லாலு, தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்காத அதிகாரிகளை கண்டித்தார். மேலும் சரியான உணவு கூட தராமல் தன்னை கர்நாடக ரயில்வே அதிகாரிகள் கேவலப்படுத்திவிட்டதாக சத்தம்போட்ட லாலு, 3 உயர் அதிகாரிகளை டிரான்ஸ்பரும் செய்துவிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பினர் பெங்களூர் சிட்டி ரெயில் நிலையத்தில் நேற்று முன் தினம் போராட்டம் நடத்தினர்.
இந் நிலையில் நேற்று இந்த அமைப்பினர் பெங்களூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்துக்குள் புகுந்து அங்குள்ள டிக்கெட் ரிசர்வேசன் கவுண்ட்டர் அறைக்குள் நுழைந்து பயங்கர தாக்குதல் நடத்தினர்.
அங்கிருந்த கம்ப்யூட்டர்கள், சர்வர்கள், யுபிஎஸ்கள், மேஜை, நாற்காலிகளை உடைத்து நொறுக்கினர். டிக்கெட் கவுண்ட்டர் அறையை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினார்கள். அங்கிருந்த ஆவணங்களையும் கிழித்து எறிந்தனர்.
இதனால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
ரிசர்வேசனுக்காக நின்றிருந்த ஆண்கள், பெண்கள், முதியவர்களும் அச்சத்தால் அலறியபடி சிதறி ஓடினர். இந்த தாக்குதலால் முன்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மாநில ேபாலீசார் உடனடி நடவடிக்கையில் இறங்கவில்லை. ரயில்வே போலீஸார் தான் ஓடி வந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை அகற்றினர்.
இச் சம்பவத்தால் பெங்களூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையப் பகுதியில் பெரும் பதற்றமும் பீதியும் நிலவியது.
இதே போல ஹூப்ளி நகரை அடுத்த காடக் ரயில் நிலையத்தையும் கன்னட அமைப்பினர் புகுந்து சூறையாடியுள்ளனர்.