மலேசியாவில் தமிழக வாலிபர் மாயம்
புளியங்குடி: மலேசியா நாட்டிற்கு வேலைக்கு சென்று கடந்த 3 ஆண்டுகளாக எந்த தொடர்பும் இல்லாமல் போன தனது மகனை மீட்டு தரும்படி புளியங்குடியை சேர்ந்த முதியவர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.
புளியங்குடியை சேர்ந்த நடராஜ முதலியாரின் 2வது மகன் கோமதி நாயகம் கடந்த 2002ம் ஆண்டு ஏஜென்ட் ஒருவர் மூலம் மலேசியாவுக்கு வேலைக்கு சென்றார். இவருடன் அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரும் சென்றார்.
கோமதி நாயகம் கடந்த 2004ம் ஆண்டு வரை தனது பெற்றொர், மனைவி சித்ரா ஆகியோருடன் போனில் பேசியுள்ளார். அதன் பிறகு அவரிடம் இருந்து எந்த தொடர்பும் இல்லை.
இதையடுத்து கோமதி நாயகத்தின் தந்தை மலேசியாவில் மகன் வேலை பார்த்து வந்த கம்பெனியிடம் பலமுறை தொடர்பு கொண்ட போதிலும் எந்த பதிலும் கிடைக்கவிலலை. இதனால் மனவேதனை அடைந்த நடராஜன் மலேசியாவில் இருந்த ராஜேந்திரனிடம் தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் அவரது பதில் திருப்தியளிக்கவில்லை.
கோமதி நாயகத்தின் மனைவி சித்ரா, மகள்கள் செல்வி, சுபா, மகன் சதீஷ் ஆகியோருடன் சங்கரன்கோவிலில் உள்ள தனது பெற்றொர் வீட்டில் தங்கி அங்கு நூல் சுற்றி கூலி வேலை செய்து தனது குழந்தைகளை காப்பாற்றி வருகிறார்.
வேலைக்காக சென்ற தனது மகன் மாயமாகிவிட்ட நிலையில் அவரை மீட்டு தரக் கோரி சென்னையில் உள்ள மலேசிய நாட்டு தூதரகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் பிரகாஷிடம் நடராஜன் மனு அளித்துள்ளார்.