போலி விசாவுடன் வந்த 7 வங்கதேசத்தவர் கைது
சென்னை: சென்னையிலிருந்து கொழும்பு வழியாக மாலத்தீவுக்கு போலி விசாவில் செல்ல முயன்ற 7 வங்கதேசத்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நேற்று இரவு சென்னையிலிருந்து கொழும்பு வழியாக மாலத்தீவு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் விமானம் கிளம்பத் தயாராக இருந்தது.
அப்போது 7 வங்கதேசத்தவரின் விசாக்களை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் அந்த விசாக்கள் போலியானவை என்று தெரிய வந்தது.
இதையடுத்து ஜலால் சாதிக் அலி (25), குவாசிம் அப்துல் ரபீக் (27), பஷீர் (24), அஜிஸ் மியா (28), ஷகியுதுல் இஸ்லாம் (30), சதார் ஹனீப் (26), அல்லம் ஹூசைன் (28) ஆகியோரை விமான நிலைய போலீஸார் கைது செய்தனர்.
அவர்கள் அனைவரும் வங்கதேசத்திலிருந்து கொல்கத்தாவுக்கு ரயில் மூலம் வந்தனர். பின்னர் அங்கிருந்து ரயில் மூலம் சென்னைக்கு வந்துள்ளனர்.
அவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கிறதா என்பதை அறிவதற்காக மீனம்பாக்கம் விமான நிலையப் போலீஸார், 7 பேரையும் கியூ பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இரவு முழுவதும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தீவிரவாதிகளுடன் அவர்களுக்குத் தொடர்பு இல்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து 7 பேரும் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 7 பேரும் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.