இன்று தங்கக் கோவில் செல்கிறார் கருணாநிதி
வேலூர்: தமிழக அரசின் இலவச கலர் டிவி திட்டத்தின் 3வது கட்ட விநியோகத்தை இன்று வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். முன்னதாக வேலூர் தங்கக் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார்.
தமிழக அரசின் இலவச கலர் டிவி திட்டம் இதுவரை 2 கட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 25 லட்சத்து 30 ஆயிரம் டிவிக்கள் ரூ. 694 கோடி செலவில் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், 3வது கட்ட டிவி வழங்கும் பணியை முதல்வர் கருணாநிதி இன்று வேலூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ் ரூ. 750 கோடி செலவில், 34 லட்சத்து 25 ஆயிரம் கலர் டிவிகள் வழங்கப்படவுள்ளன.
இதே நிகழ்ச்சியில் 2வது கட்ட இலவச எரிவாயு இணைப்பு, அடுப்பு வழங்கும் பணியையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார். 2வது கட்டத்தில் மொத்தம் 8 லட்சம் குடும்பங்களுக்கு ரூ. 160 கோடி செலவில் அடுப்பும், இணைப்பும் வழங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதில், 2 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு இதுவரை வழங்கப்பட்டு விட்டது. மீதம் உள்ள 5 லட்சத்து 83 ஆயிரம் குடும்பங்களுக்கு அடுப்பும், இணைப்பும் வழங்கும் பணி இன்று தொடங்குகிறது.
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், சேர்க்காடு ஊராட்சியில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் விழாவுக்கு பொதுப்பணித்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.
முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு இலவச டிவி பெட்டிகள், இலவச எரிவாயு அடுப்புகள் ஆகியவற்றை வழங்குகிறார். நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.
வேலூர் - காட்பாடி இடையே பாலாற்றின் குறுக்கே கட்டப்பட இருக்கும் புதிய பாலத்துக்கும் முதல்- அமைச்சர் கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார். வேலூர் மாவட்ட கலெக்டர் தர்மேந்திர பிரதாப் யாதவ் வரவேற்று பேசுகிறார்.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக முற்பகல் 11 மணியளவில், அரியூர் திருமலைக்கோடி நாராயண சித்திர் பீடத்திற்கு கருணாநிதி செல்கிறார்.
அங்கு, சக்தி அம்மா 32-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு வேலூரில் 320 ஏழை குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கும் விழா நடக்கிறது. இந்த விழாவுக்கு அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.
முதல்-அமைச்சர் கருணாநிதி 320 ஏழை குழந்தை களுக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்.
வேலூர் வரும் முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications