விண்ணப்பித்த 60 நாட்களில் புதிய ரேஷன் கார்டு: அமைச்சர் வேலு
சென்னையில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய வேலு கூறுகையில்,
எந்தவொரு நியாய விலைக் கடைகளிலும் சிறப்பு பொது விநியோகத் திட்டப் பொருட்களான துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், ரவை, மைதா, கோதுமை மாவு (ஆட்டா) போன்றவைகள் இருப்பு இல்லை என்ற நிலையே இருக்கக் கூடாது.
மேலும் விற்பனையாகாத பொருட்கள் நியாய விலைக் கடையில் இருந்தால் அவைகளை உடனுக்குடன் தேவையுள்ள நியாய விலைக் கடைகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மாற்ற ஆணை பிறப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி முதல் அனைத்து பொருட்களையும் பொது மக்களுக்கு வழங்க வேண்டும்.
நியாய விலைக் கடைகளில் இருப்பு இல்லை என்ற நிலையே இருக்க கூடாது. பொதுமக்கள் அறியும் வண்ணம் பொருட்களின் மாதிரிகள் நியாய விலைக் கடை களின் முகப்பில் அட்டைதாரர்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
மேலும் பகுதி நேர நியாய விலை கடைகள் திறக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பெறப்பட்டு, கோரிக்கைகள் நிலுவையிலிருப்பின் அவைகள் விதிகளுக்குட்பட்டிருந்தால் உடனடியாக திறக்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.
மேலும் குடும்ப அட்டை வழங்கக் கோரி பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து 60 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.