பாமக பிரமுகருடன் மதானி ஆதரவாளர்கள் ஆலோசனை-உளவுப் பிரிவு 'உஷார்'
நெல்லை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி பின்னர் சிறைவாசத்திலிருந்து மீண்ட கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியின் ஆதரவாளர்கள், பாமக முக்கியப் பிரமுகருடன் ஆலோசனை நடத்திச் சென்றுள்ளனர்.
கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவராக இருந்து வரும் மதானி, கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இவரின் ஆதரவாளர்கள் 5 பேர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள பாமக பிரமுகர் ஓருவரின் வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வந்தனர். அங்கு தங்கி பாமக பிரமுகருடன் ஆலோசனை நடத்தினர்.
நேற்று முன்தினம் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு பிரபல கட்சியின் முக்கிய பிரமுகர் வீட்டிற்கு சென்றனர்.
இவர்கள் வந்து போன தகவல் உளவு துறையினருக்கு தெரிய வந்தது. உடனடியாக சென்னையில் உள்ள தங்களது உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
இதனையடுத்து அவர்களின் உத்தரவின் பேரில் அம்பையை சேர்ந்த பாமக முக்கிய பிரமுகரை உளவு துறையினர் அழைத்து சென்று விசாரனை நடத்தினர். பிறகு அவரை நாகர்கோவில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.