மலேசிய தூதரகம் முன் ராம.கோபாலன் போராட்டம்
சென்னை: மலேசியாவில் இந்திய வம்சாவழியினருக்கு முழு உரிமைகள் வழங்கக் கோரி இந்து முன்னணி சார்பில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மலேசிய தூதரகம் முன் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் தலைமையில் நடக்கவிருந்த இந்தப் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
ஆனாலும், இன்று காலை ராம கோபாலன் தலைமையில் 30 இந்து முன்னணி தொண்டர்கள் மலேசிய தூதரகம் முன் கூடி மலேசிய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் மலேசிய தூதரக காவலர்களுக்கு பூச்செண்டு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் தடுத்தபோது சாலை மறியல் செய்ய முயன்றனர். இதையடுத்து ராமகோபாலன் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது ராமகோபாலன் நிருபர்களிடம் கூறியதாவது:
மலேசியாவை வளப்படுத்துவதற்காக இந்தியாவில் இருந்து இந்துக்களை ஆங்கிலேயர்கள் அனுப்பி வைத்தனர். பெரும்பாலான இந்திய வம்சாவளியினர் ரப்பர், தேயிலை தோட்டங்களில் வேலை செய்கிறார்கள்.
மலேசிய நாட்டை வளமாக்கிய அவர்களுக்கு வாழ்வுறுதி அளிக்கப்படவில்லை. கல்வி, வேலை வாய்ப்பு இல்லை. பிச்சைகாரர்களாகவும், அனாதைகளாகவும், அடிமைகளாகவும் நடத்தப்படுகிறார்கள். உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
இதை கண்டிக்கும் வகையிலும், உரிமை வழங்க வற்புறுத்தியும் மலேசிய தூதரக அதிகாரிகளுக்கு பூச்செண்டு கொடுத்து, போராட்டம் நடத்துகிறோம். மலேசியாவிலும் இன்று போராட்டம் நடக்கிறது.
இந்தப் பிரச்சனைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும். மலேசியா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யக்கூடாது. ஐ.நா. சபை, காமன்வெல்த் அமைப்பில் இருந்து மலேசியாவை நீக்க வேண்டும் என்றார்.