விசா வழங்கும் பணியை மீண்டும் தொடங்க குவைத் முடிவு
டெல்லி: இந்தியாவில் உள்ள குவைத் நாட்டு தூதரகமும், துணைத் தூதரக அலுவலகமும், மீண்டும் விசா வழங்கும் பணியைத் தொடங்கவுள்ளதாக மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்களுக்கு புதிய விதிமுறைகள், கட்டுப்பாடுகள், ஊதிய விகிதத்ைத இந்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதற்கு குவைத் அரசு ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
இந்தியா விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளின்படி, இந்தியாவிலிருந்து குவைத்துக்கு வேலைக்குச் செல்லும் வீட்டுப் பணிப் பெண்கள் உள்ளிட்ட வேலையாட்களுக்கு எட்டு மணி நேரம் பணி நேரமாக வழங்கப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கு அவர்களின் ஸ்பான்சர்கள் செல்போன் இணைப்பை வழங்க வேண்டும்.
இந்தியாவில் உள்ள தங்களது குடும்பத்தினர் அல்லது உறவினர்களுடன் அவர்களுக்குத் தொடர்பு இருக்கும் வகையில் ஸ்பான்சர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
ஆனால் இதை குவைத் நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை. இவையெல்லாம் குவைத் சட்டத்திற்கு உட்பட்டதில்லை. எனவே இவற்றை ஏற்க முடியாது. குவைத் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு கட்டுப்பாடுகளை இந்தியா நிர்ணயிக்க வேண்டும் என்று கூறி விட்டது.
இந்தப் பிரச்சினையைத் தொடர்ந்து 2007ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி முதல் விசாக்களுக்கு அனுமதி தருவதை டெல்லியில் உள்ள குவைத் தூதரகமும், மும்பையில் உள்ள துணைத் தூதரகமும் நிறுத்தி வைத்தன.
இந்த நிலையில் இந்த பிரச்சினையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரம் முதல் மீண்டும் விசாக்கள் வழங்கும் பணியை குவைத் தூதரக அலுவலகங்கள் தொடங்கும் எனவும் மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், குவைத் நிர்வாகத்துடன் மத்திய அரசு உடன்பாட்ைட மேற்கொண்டுள்ளது. இதையடுத்து திங்கள் கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் விசா வழங்கும் பணி தொடங்கும் என்றார்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக குவைத்துக்கான இந்தியத் தூதர், டெல்லி வந்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதா என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஏற்கனவே இதேபோன்ற திட்டத்தை பஹ்ரைனிலும் இந்திய அரசு அமல்படுத்தவுள்ளது. மார்ச் மாதம் முதல் இது அமலுக்கு வரும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.