"இதுதான் மாற்றமா?" அதிமுக ஐடி விங் நிர்வாகி இந்திராணி சுடலைமுத்து கைதுக்கு காயத்ரி ரகுராம் கண்டனம்
சென்னை: பழனி நில முறைகேடு தொடர்பாக பதிவிட்ட அதிமுக ஐடி விங் நிர்வாகி இந்திராணி சுடலைமுத்து கைது செய்யப்பட்டதற்கு நடிகையும், அதிமுக மாநில மகளிர் அணி துணைச் செயலாளருமான காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பழனி கோயில் நிலம் பத்திரப்பதிவில் நடைபெற்ற முறைகேடு குறித்து கேள்வி எழுப்பி, தவெக அரசு ஏன் நிலத்தை வாங்கிய நபரின் விவரங்களை வெளியிடவில்லை எனக் கேள்வி எழுப்பி எக்ஸ் தளத்தில் பதிவு செய்த அதிமுக ஐ.டி விங் நிர்வாகி இந்திராணி சுடலைமுத்து மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.

தவெக அரசை விமர்சித்ததற்காக அதிமுக ஐடி விங் நிர்வாகி இந்திராணி சுடலைமுத்து கைது செய்யப்பட்டதற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தவெக அரசின் மாற்றம் என்பதன் அர்த்தம் இதுதானா என்று அதிமுக மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
காயத்ரி ரகுராம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தவெக அரசை விமர்சித்ததற்காக அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி இந்திராணியை கைது செய்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. "மாற்றம்" என்பது இதைத்தான் குறிக்கிறதா? விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு ஒரு அரசு இருந்தால், அது பொதுப் பதவியில் இருக்கக்கூடாது. உண்மையான குற்றவாளிகள் சுதந்திரமாக உலவும் நிலையில், விமர்சிப்பவர்களைக் குற்றவாளிகளைப் போல நடத்தக்கூடாது. தவெக அரசின் இச்செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications