வீரமணி அட்வைஸ் தேவையில்லை-அருண்குமார்
டெல்லி: தனக்கு வீரமணி எந்த ஆலோசனையும் சொல்லத் தேவையில்லை என தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் அருண்குமார் கூறியுள்ளார்.
முன்னதாக அருண்குமாரை ஜாதியையும் குறிப்பிட்டுப் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டே விஜய்காந்துடனும் கூட்டணி குறித்துப் பேசி வருவதோடு, முதல்வர் கருணாநிதியையும் மதிக்காமல் திரிந்து வருவதாக அருண்குமார் மீது குற்றம் சாட்டியிருந்தார்.
இது குறித்து டெல்லியில் இன்று அருண்குமார் கூறுகையில்,
எங்களுக்கு என்று சில கொள்கை, கோட்பாடுகள் இருக்கின்றன. இதன்படி தான் நடந்து கொண்டிருக்கிறோம். இந்த விஷயத்தில் வீரமணி எனக்கு எந்த ஆலோசனையும் சொல்லத் தேவையில்லை.
அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அரசியல் தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அதை நாங்கள் காட்டிக் கொள்ளமாட்டோம். எதிர்க்கட்சி தலைவர்களை பார்க்கும் போது முகத்தை திருப்பிக் கொண்டு செல்லும் பழக்கம் எங்களிடம் கிடையாது.
மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசுவோம், நலம் விசாரித்து கொள்வோம். அந்த அடிப்படையில் தான் விஜயகாந்த்துடன் பேசினேன்.
வீரமணி தனது கருத்தை சொல்வதற்கு ஜனநாயக உரிமை உள்ளது. அதை சொல்லி இருக்கிறார். இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றார்.
விஜய்காந்துடன் தான் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், அதை காலம் வரும்போது சொல்வதாகவும் அருண்குமார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது நலம் விசாரித்தேன்.. அவ்வளவு தான் என்று மழுப்பியிருக்கிறார்.