பொய் போலீசுக்கு பெங்களூரில் உண்மை கண்டறியும் சோதனை
சென்னை: தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் துப்பாக்கிகள் களவு போனது தொடர்பாக, உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்காக சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட 8 போலீஸாரும் மறுபடியும் இன்று திடீரென தர்மபுரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு பெங்களூரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படவுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரியை அடுத்துள்ள அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 8ம் தேதி நள்ளிரவு துப்பாக்கிகள் மற்றும் ஒரு வாக்கிடாக்கி ஆகியவை காணாமல் போயின. இதை நக்சலைட்டுகள் கொள்ளையடித்துச் சென்றதாக காவல் நிலைய போலீசார் கூறினர்.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், தலைமைக் காவலர்கள் ராஜா, ராஜமாணிக்கம், காவலர் சுப்பிரமணி ஆகியோர் பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஒரு சப் இன்ஸ்பெக்டர் உள்பட 18 பேர் அதிரடியாக மாற்றப்பட்டனர்.
ஆனால், இந்த காவல் நிலைய போலீசார் மீதே சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காவல் நிலையத்தை ஒட்டிய வயல்களிலும் கிணறுகளிலும் சோதனை நடத்தி வாழைத் தோட்டத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 5 துப்பாக்கிகளை கைப்பற்றினர். வாக்கி டாக்கியும், இன்னொரு துப்பாக்கியும் சிக்கவில்லை.
இந் நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய அதியமான் கோட்டை காவல் நிலைய போலீஸாரிடம் கூடுதல் டிஜிபி விஜயக்குமாரின் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடந்து கொண்டுள்ளது.
இதில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸார் நால்வர் மற்றும் டைப்பிஸ்ட் செந்தில்குமார், டிரைவர் சின்னபையன், தலைமைக் காவலர்கள் தங்கவேல், பார்த்திபன் ஆகியோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து 8 பேரும் கடந்த 16ம் தேதி சென்னைக்குக் கொண்டு வரப்பட்டனர். சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடந்தது. நேற்று கீழ்ப்பாக்கம் அரசினர் மன நல மருத்துவமனையில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் காலையில் எந்த சோதனையும் நடத்தப்படவில்ைல. இதுகுறித்து விசாரணைக் குழுவுக்குத் தலைமை தாங்கி வந்திருந்த நாமக்கல் எஸ்.பி. ஜான் நிக்கல்சன் கூறுகையில், சோதனை தொடர்பாக மருத்துவர்களுடனும், உயர் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடந்து வருவதாக ெதரிவித்தார்.
இந்த நிலையில் திடீரென நேற்று மாலை அயனாவரத்தில் உள்ள மன நல மருத்துவக் கழகத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று போலீசார் மறுத்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று திடீர் திருப்பமாக 8 பேரும் இன்று மறுபடியும் தர்மபுரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுடன் தர்மபுரி கூடுதல் எஸ்.பி. மகேஷ்குமாரும் தர்மபுரிக்குச் சென்றார்.
அங்குள்ள ஆயுதப்படை மைதானத்தில் வைத்து 8 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்படவுள்ளது.
சென்னைக்குப் பதிலாக வருகிற 28ம் தேதி பெங்களூரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படவுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை கண்டறியும் சோதனையை நடத்த நீதிமன்றத்தில் அனுமதி தேவை என்பதால்தான் நேற்று சென்னையில் அந்த சோதனை நடத்தப்படவில்ைல என்று தெரிகிறது. எனவே முறைப்படி நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று பெங்களூரிலேயே அந்த சோதனையை நடத்த போலீஸ் தரப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.