லஞ்சம் வாங்கி பெண் எஸ்ஐ கையும் களவுமாக கைது
திருவள்ளூர்: திருவள்ளூரில் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூரைச் சேர்ந்தவர் தாமோதரன். இவரது மகள் பாக்கியலட்சுமி (20) சென்னையைச் சேர்ந்த குரு என்பவரைக் காதலித்தார். இந்தக் காதலை பெற்றோர் ஏற்கவில்லை. இதையடுத்து தனக்கும் காதலருக்கும் பாதுகாப்பு கோரி திருவலங்காடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரை விசாரித்தார் திருவலங்காடு காவல் நிலைய பெண் எஸ்.ஐயான கோமதி. அப்போது, இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுத்தால் உங்களை உள்ளே தள்ள முடியும். நீங்கள் தப்பிக்க வேண்டுமானால் ரூ. 50,000 லஞ்சம் தர வேண்டும் என தாமோதரனை மிரட்டியுள்ளார்.
ஒரு பக்கம் மகள் தந்த நெருக்கடி, இன்னொரு பக்கம் எஸ்.ஐ. மிரட்டல் என இரு பெண்களிடம் சிக்கித் தவித்த தாமோதரன், இது குறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புப் போலீசாருக்கு தகவல் தந்தார்.
அவர்கள் பணத்துடன் போலீஸ் குவார்டர்சில் உள்ள கோமதியின் வீட்டுக்குப் போகுமாறு கூறினார்.
இதையடுத்து முதல் கட்டமாக ரூ. 10,000 டோக்கன் அட்வான்சாக தருவதாக தாமோதரன் கூறவே, வீட்டுக்கு வருமாறு கோமதியே அழைத்தார்.
இதைத் தொடர்ந்து பணத்துடன் தாமோதரன் அங்கு சென்றார். வெளியே லஞ்ச ஒழிப்புப் போலீசார் பதுங்கியிருந்தனர். பணத்தை வாங்கிக் கொண்டு, மிச்சப் பணம் ஒரு வாரத்துல வந்து சேரணும் என கோமதி மிரட்டிக் ெகாண்டிருந்தபோதே போலீசார் உள்ள நுழைந்து கையும் களவுமாக அவரைப் பிடித்தனர்.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.