தேர்வு எழுத அனுமதி மறுப்பு-கலெக்டரிடம் கதறியழுத மாணவிகள்
திருச்சி: சட்ட விரோதமாக கூடுதலாக மாணவிகளை படிப்பில் சேர்த்த தனியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி நிர்வாகம், தேர்வு எழுத ஹால் டிக்கெட் கொடுக்காமல் 50 மாணவிகளை அல்லாட விட்டுள்ளது.
இதையடுத்து அந்த மாணவிகள், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து கதறியழுதபடி புகார் மனுவைக் கொடுத்தனர்.
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்துள்ளது புள்ளம்பாடி. இங்கு தனியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி உள்ளது. இங்கு 100 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதில் 50 பேரை விதிகளை மீறி கூடுதலாக சேர்த்துள்ளனர்.
முதலாமாண்டு படிக்கும் இவர்களுக்கு நேற்று தேர்வு தொடங்கியது. இந் நிலையில், தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுக்கள் 50 பேருக்கு மட்டுமே தரப்பட்டது. மற்றவர்களுக்கு ஹால் டிக்கெட் தரப்படவில்லை. இதனால் இவர்களால் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டது.
அதிர்ச்சி அடைந்த 39 மாணவிகள் உள்பட 50 மாணவ, மாணவியரும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது ஆட்சித் தலைவர் ஆசிஷ் வச்சானி மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்று மனுக்களைப் பெற்றுக் கொண்டிருந்தார்.
அவரை சந்தித்து கோரிக்கை மனுவைக் கொடுத்தனர் மாணவ, மாணவியர். அப்போது மாணவிகள் கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
அனைவரும் தலா ரூ. 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை பணம் கொடுத்து இந்தப் படிப்பில் சேர்ந்ததாகவும், இப்போது தேர்வு எழுத தாங்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் மாணவிகள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
அவர்களை ஆறுதல்படுத்திய ஆட்சித் தலைவர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications