மாசி திருவிழா-நாளை திருச்செந்தூர் கோவில் தேரோட்டம்
திருச்செந்தூர்: மாசித் திருவிழாவையொட்டி திருச்செந்தூர் கோவிலில் நாளை தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிய உள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புகழ்பெற்ற மாசித் திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள் பாலித்து வருகிறார்.
நேற்று 8ம் திருநாளையொட்டி காலையில் மேலக்கோவில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. அதன் பின்னர் சுவாமி பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் வலம் வந்தார்.
வழி நெடுகளிலும் திரளான பக்தர்கள் சுவாமிக்கு தேங்காய், பழம் உடைத்து பன்னீர், மரிக்கொழுந்து, பச்சை பட்டுகள் சாத்தி வழிபட்டனர்.
இந்த திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (புதன்கிழமை) காலை நடைபெறுகிறது.
பெரிய தேரில் சுவாமியும், சிறிய தேரில் அம்பாளும் வெளிவீதிகளில் பவனி வருகிறார்கள். தேர்திருவிழாவை காணவும், தேர் இழுக்கவும், தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர்.
ஆயிரக்கணக்கானோர் பாத யாத்திரையாகவும் வந்து கொண்டுள்ளனர்.
இந்த விழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில், தூத்துக்குடி, நெல்லை, மதுரை ஆகிய இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.