கைகள் இல்லாமல் பிறந்த குழந்தை!
கரூர்: கரூரில் இரண்டு கைகள் இல்லாமல் ஒரு குழந்தை பிறந்தது.
கரூர் அருகே கீரனூர் மீனாட்சி புரத்தை சேர்ந்தவர் ராஜமூர்த்தி (24). இவரது மனைவி பரிமளா (22). இவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது.
இந் நிலையில் பரிமளாவுக்கு கடந்த 4 ம் தேதி குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை கண்டு அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அந்த குழந்தைக்கு இரண்டு கைகளும் இல்லை. இதைக்கண்டு பெற்றோர் கண்ணீர் வடித்து கதறினர்.
இதனை சரி செய்ய நவீன மருத்துவ உலகில் ஏதாவது வழி உண்டா என அலைந்து திரிந்த போது அவர்களை சென்னைக்குச் செல்லுமாறு கரூர் டாக்டர்கள் கூறினர்.
இதனால் தங்களது குழந்தைக்கு மேல் சிகிச்சை அளிக்க உதவி செய்யக் கோரி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷிடம் குழந்தையின் பெற்றோர்கள் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து ராஜமூர்த்தி தம்பதியினர் கூறுகையில், நாங்கள் கூலி வேலை செய்து வருகிறோம். எங்களிடம் குழந்தைக்கு வைத்தியம் பார்க்கும் அளவுக்கு வசதி வாய்ப்பு இல்லை.
எனவே எங்கள் குழந்தைக்கு அரசு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்கு உதவி செய்யக் கோரி தான் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தோம் என்றனர்.