புதிய அணை கட்டுவோம்-கேரளா பிடிவாதம்
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டும் முயற்சியை கைவிட மாட்டோம் என கேரளா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
கேரள சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கியது. இதில் பங்கேற்று உரையாற்றினார் கேரள கவர்னர் ஆர்.எல்.பாட்டியா. அம் மாநில அரசின் அறிக்கையை அவர் படித்தார்.
அதில், முல்லைப் பெரியாறு அணை பலம் இழந்து காணப்படுகிறது. ஆனால், இந்த அணையின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்று அண்டை மாநிலமான தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
அணையின் உயரத்தை அதிகரித்தால், அணை உடையும் அபாயம் உள்ளது. இதனால், அணையை சுற்றியுள்ள மாவட்ட மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். எனவே, புதிய அணை கட்டுவது தான் தீர்வாகும்.
கேரள அரசு புதிய அணை கட்டும் முயற்சியை தொடர்ந்து மேற்கொள்ளும் என்றார்.
புதிய அணை கட்டி நீரை முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் முன்பே தடுத்து தேக்க கேரளம் முயல்கிறது. இதனால் தமிழக எல்லைப் பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வருவது தடைபடும்.
இதன் மூலம் தமிழகத்துக்கு நீர் விடுவதை தவிர்க்க கேரளம் திட்டமிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பலமானதாகவே உள்ளதை பல நிபுணர்கள் மீண்டும் மீண்டும் சொன்ன பின்னரும் அணை பலவீனமாக உள்ளதாகக் கூறி அதன் உயரத்தை கூட்ட மறுத்து வரும் கேரளம், புதிய அணை கட்டி தமிழகத்தின் வயிற்றில் அடிக்க திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications