கருணாநிதியுடன் ராமதாஸ் சந்திப்பு: கூட்டணி தொடரும் என அறிவி்ப்பு

சமீப காலமாக திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே கடும் பனிப்போர் நடந்து வருகிறது. திமுக அரசின் பல்வேறு திட்டங்களை மிகக் குடமையாக விமர்சித்து வருகிறது பாமக.
பாமக நிறுவனர் ராமதாஸே நேரடியாக திமுக அரசின் பல திட்டங்களை பகிரங்கமாக விமர்சித்துப் பேசி வருகிறார். ஆற்காடு வீராசாமி, பொன்முடி உள்ளிட்ட மூத்த அமைச்சர்களை கடுமையாக சாடி வந்தது பாமக.
பாமகவுக்குப் பதிலடி தரும் வகையில் திமுக தரப்பும் கடுமையாக விமர்சித்து வந்தது.
இந்த நிலையில் திடீர் ஸ்பீட் பிரேக்கராக வந்து அமைந்தது முதல்வர் கருணாநிதியின் அறிக்கை. ஆடம்பர பேனர்கள், கட் அவுட்கள் வைக்கக் கூடாது என்று திமுகவினரைக் கண்டித்து அவர் வெளியிட்ட அறிக்கையை மனதாரப் பாராட்டிய டாக்டர் ராமதாஸ், இதற்காக முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கப் போவதாகவும் தடாலடியாக அறிவித்தார்.
இதனால் அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று அந்த சந்திப்பு நடந்தது.
கோபாலபுரம் இல்லத்திற்கு வந்த டாக்டர் ராமதாஸ், முதல்வரை சந்தித்து பூங்கொடுத்து கொடுத்து வாழ்த்தினார். பின்னர் இரு தலைவர்களும் சுமார் முக்கால் மணி நேரம் பேசினர். இந்த சந்திப்பின்போது பாமக தலைவர் ஜி.கே.மணியும் உடன் இருந்தார்.
சந்திப்புக்குப் பின்னர் வாயெல்லாம் சிரிப்பாக வெளியே வந்த டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ் கட்டாயப் பாடம் என்ற சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்திருப்பது குறித்து முதல்வரிடம் பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்தேன். நன்றியும் கூறினேன்.
அதேபோல கட் அவுட்கள், பேனர்கள் வைக்கக் கூடாது என்று அவர் உத்தரவிட்டதற்காக நன்றி தெரிவித்தேன்.
கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணி தொடரும். இதை 100க்கு 200 சதவீதம் உறுதியாக கூறுகிறேன். இதையே நான் நூறு முறை கூறி விட்டேன். திரும்பத் திரும்பக் கேட்காதீர்கள்.
தமிழக அரசு விவசாயத்திற்கு என தனியாக நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று முதல்வரை வலியுறுத்தியுள்ளேன்.
மது ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரம் வருகிற 26ம் தேதி தொடங்கி 5 நாட்களுக்கு நடைபெறும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications