போலி சிலைகளை காட்டி ஏமாற்றிய எஸ்ஐ டிரான்ஸ்பர்!
நெல்லை: திருடு போன சிலைகளை மீட்பதற்குப் பதில், பூம்புகார் விற்பனை நிலையத்திலிருந்து சில சிலைகளை வாங்கி அதை உயரதிகாரிகளிடம் காட்டி, சிலைகளை மீட்டுவிட்டதாக 'வடிவேலு ரேஞ்சுக்கு நடிப்பைப் போட்ட' பாளையங்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதபுரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த சப்-இன்ஸ்பெக்டர் சிலை தவிர மேலும் பல விவகாரங்களிலும் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1999ம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் பல்வேறுகோயில்களில் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் கோவிந்தன், சப் இன்ஸ்பெக்டர் ரகுநாத் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் சில சிலைகளை மீட்கப்பட்டதாக கூறி உயர் அதிகாரிகளிடம் காட்டி பாராட்டு பெற்றனர். இந்த நிலையில் அவர்கள் காட்டிய சிலைகள் மீட்கப்பட்டவை அல்ல, நெல்லை பூம்புகார் விற்பனை நிலையத்தில் வாங்கப்பட்ட சிலைகள் என கொஞ்சம் லேட்டாக உயர் அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.
இதையடுத்து அப்போது எஸ்பியாக இருந்த கண்ணப்பன் விசாரனை நடத்தி இன்ஸ்பெக்டர் கோவி்ந்தன், சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாத் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த 7 போலீஸ்காரர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
அதன்பிறகு மாநகர கமிஷனராக வந்த நந்தபாலன் அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தினார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாத் மீது கடந்த 2005ம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரிடம் தனது உயரதிகாரிக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி நவீன செல்போன் ஒன்றை வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுநதது. இதையடுத்து அவர் மீண்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பின்னர் அவர் மீண்டும் பணியில் சேர்ந்தார். பாளை கண்ட்ரோல் ரூமில் இருந்த அவர் அதன்பிறகு ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாத்தை ஐஜி சஞ்சீவ் குமார் ராமநாதபுரத்திற்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.