For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சர்தாரி மீதான ஊழல் வழக்கை தோண்டி எடுக்க முஷாரப் உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

Zardari
இஸ்லாமாபாத்: நவாஸ் ஷெரீப்புடன் சேரக் கூடாது என்று தான் விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத் தலைவரும், பெனாசிர் பூட்டோவின் கணவருமான ஆசிப் அலி சர்தாரி நிராகரித்து விட்டதால் கடுப்பாகியுள்ள அதிபர் முஷாரப், சர்தாரி மீதான ரூ. 220 கோடி ஊழல் வழக்கை தோண்டி எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் தேர்தலில் நவாஸ் கட்சியும், பெனாசிர் கட்சியும் பெரும் வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து இரு கட்சிகளும் கூட்டணி ஆட்சி அமைக்கத் திட்டமிட்டுள்ளன.

இதை விரும்பாத அதிபர் முஷாரப், நவாஸ் ஷெரீப்புடன் கூட்டணி வைக்க வேண்டாம், அவரை பிரதமர் பதவிக்குக் கொண்டு வர வேண்டாம் என பெனாசிரின் கணவரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவருமான ஆசிப் அலி சர்தாரியை முஷாரப் வற்புறுத்தினார்.

இதுதொடர்பாக முஷாரப்பின் தூதர்கள், சர்தாரியை சந்தித்துப் பேசினர்.

தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் தாரிக் அஜீஸ் தலைமையில் சென்ற முஷாரப்பின் தூதர்கள் சர்தாரியை சந்தித்துப் பேசினர்.

அப்போது, நவாஸுடன் கூட்டணி வைக்க வேண்டாம். கூட்டணி அரசு அமைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். அப்படியே, கூட்டணி அமைப்பதாக முடிவு செய்தால், ஷெரீப்பை பிரதமர் பதவியில் நியமித்து விட வேண்டாம். அவருக்குப் பதில், பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த துணைத் தலைவர் மக்தூம் அமீன் பாஹிம் அல்லது பஞ்சாப் மாகாண தலைவர் ஷா மக்மூது குரேஷி அல்லது மூத்த தலைவர் யூசுப் ரஸா கிலானி ஆகியோரில் ஒருவரை பிரதமராக்குங்கள் என்று கேட்டுக் கொண்டார்களாம்.

ஆனால் சர்தாரி இதை ஏற்க மறுத்து விட்டார். திட்டமிட்டபடி இன்று நவாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசவும் அவர் முடிவு செய்தார்.

வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு

இதனால் அதிர்ச்சி அடைந்த முஷாரப், சர்தாரி மீதான ரூ. 220 கோடி ஊழல் வழக்கை தோண்டி எடுத்து மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

பெனாசிர் பிரதமராக இருந்தபோது சுவிஸ் வங்கியில் பல கோடி பணத்தை சர்தாரி குவித்து வைத்தார் என்பதுதான் அந்தப் பழைய வழக்கு. கிட்டத்தட்ட ரூ. 220 கோடி அளவுக்கு பணத்தை சுவிஸ் வங்கிகளில் சர்தாரி போட்டு வைத்துள்ளார் என்று நவாஸ் ஷெரீப் ஆட்சிக்காலத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு பின்னர் அப்படியே கிடப்பில் இருந்து வந்தது. இந்த வழக்கைத்தான் இப்போது முஷாரப் தோண்டி எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு குறித்து தகவல்களை அளிக்குமாறு கோரி சுவிஸ் நீதிமன்றத்தை அணுக பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது. உடனடியாக இதுதொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளனவாம்.

முஷாரப்பின் இந்த அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தான் அரசியலில் மீண்டும் பரபரப்பு கூடியுள்ளது.

விலக மாட்டேன்-முஷாரப்:

முன்னதாக, அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் இதழுக்கு முஷாரப் அளித்துள்ள பேட்டியில், ஓய்வு குறித்தோ, ராஜினாமா குறித்தோ நான் இதுவரை சிந்திக்கவே இல்லை. அந்த எண்ணமே என்னிடம் இல்லை.

நிலையான ஜனநாயக அரசை ஏற்படுத்தும் நடவடிக்கையில் மட்டுமே இப்போது அனைவரும் தீவிர கவனம் செலுத்த வேண்டும். வேறு சிந்தனைகளில் மூழ்கக் கூடாது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பதவிக்குக் கொண்டு வர முடியாது. சட்டப்பூர்வமாக அது சாத்தியமில்லை. உச்சநீதிமன்றமும், பிற உயர்நீதிமன்றங்களும் போதிய அளவிலான நீதிபதிகளுடன் உள்ளன.

இதுதொடர்பாக என்னிடம் கோரிக்கை வந்தால் அதுகுறித்து அப்போது நான் முடிவெடுப்பேன் என்றார் முஷாரப்.

முன்னதாக இஸ்லாமாபாத்தில் முஷாரப்பை அமெரிக்க எம்.பி. எல்டன் காலக்லி சந்தித்தார். அவரிடம் முஷாரப் பேசுகையில், பாகிஸ்தானில் அமைதியான முறையில் நடந்துள்ள தேர்தல் ஜனநாயகத்தை வலுப்படுத்தியுள்ளது. ஜனநாயக சக்திகளுக்கு ஊக்கம் தருவதாக உள்ளது.

இப்போது அமைதியான, நல்லிணிக்கத்துடன் கூடிய ஒரு கூட்டணி அரசு தேவை. அதற்கான முயற்சிகள் நடந்து கொண்டுள்ளன என்றார் அவர்.

பதவிக்காக எதையும் செய்யும் முஷாரப், தேர்தல் நடந்த மறுதினமே ஜனநாயகத்துக்கு குழி தோண்ட ஆரம்பித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X