கர்நாடகா ஸ்டிரைக்-இரவு முதல் தமிழக லாரிகள் நிறுத்தம்
கர்நாடகா மாநிலத்தில் லாரிகளுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதை எதிர்த்து கடந்த மாதம் போராட்டம் நடந்தது. இதில் கால் டாக்சிகள் உள்ளிட்ட வாகனங்களும் பங்கேற்றதால் பயணிகளும், பிபிஓ, கால் சென்டர் நிறுவன ஊழியர்களும் பெரும் சிக்கலுக்கு ஆளாயினர்.
இந் நிலையில் மீண்டும் இன்றிரவு முதல் காலவரையற்ற போராட்டத்துக்கு கர்நாடக லாரி உரிமையாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதிலும் டாக்சிகள், வர்த்தக வாகனங்கள் பங்கேற்கும் எனத் தெரிகிறது.
இதனால் தமிழத்தை சேர்ந்த லாரிகள் கர்நாடகாவிற்குள் செல்லாது என தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சங்கத்தின் செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கர்நாடக மாநில லாரி உரிமையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிப்ரவரி 22ம் தேதி முதல் தமிழக லாரிகள் கர்நாடக மாநிலத்திற்குள் சரக்குகள் ஏற்றவோ, இறக்கவோ செல்லாது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் கர்நாடகம் வழியாக வட மாநிலங்களுக்கு தமிழக லாரிகள் செல்வதும் தடைபடவுள்ளது.
இதனால் தமிழகத்தில் இருந்து காய்கறி, பருப்பு வகைகள், கோழி, கோழித்தீவனம், முட்டை, ஜவுளிப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்படவுள்ளது.