என்னையும் ராமதாஸையும் பிரிக்க முடியாது-திருமாவளவன்
சென்னை லயோலா கல்லூரியில் தமிழ்ப் பண்பாடும், சாதிப் பிரிவினையும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் ஆகியோர் பேசினர்.
ராமதாஸ் பேசுகையில், தலித் மக்களுக்கும் மிக பிற்படுத்தப்பட்ட வன்னிய மக்களுக்கும் இடையே இதற்கு முன்பு தகராறு ஏற்பட்டபோது அன்றைய கலவரத்துக்கு காரணம் நான் தான் என என் மீது பழி சுமத்தப்பட்டது.
சில தலைவர்கள் என்னை 'வீடு கொளுத்தி' என்று கூட கூறினார்கள். அப்படி சொன்னவர்களே மனம் மாறி ராமதாஸ் அப்படிப்பட்டவர் கிடையாது என பின்னர் கூறினார். இரு சமுதாய மக்களும் அமைதியாக ஒற்றுமையாக வாழ அப்போதே நான் தான் முயற்சி எடுத்தேன் என்றார்.
திருமாவளவன் பேசுகையில்,
இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதால் டாக்டர் ராமதாஸ் வருவாரா, வரமாட்டாரா என நிகழ்ச்சி நடத்துபவர்கள் சந்தேகப்பட்டதாகக் கூறினார்கள்.
டாக்டர் ராமதாசுடன் நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய வளர்ச்சியில் ராமதாசின் பங்கு அதிகம். என்னையும் டாக்டர் ராமதாசையும் யாராலும் பிரிக்க முடியாது. வன்னியர், தாழ்த்தப்பட்ட சமுதாயம் இடையே பகையை குறைக்க பாடுபட்டவர் ராமதாஸ்.
ஜாதி, மதம் நம் பண்பாட்டை சிதைத்து விட்டது. ஜாதிப் பிரிவினை அதிகமானதற்கு மத மோதல்கள் தான் காரணம் என்றார்.