பஹ்ரைன்: இந்தியத் தொழிலாளர்களுக்கு தூதர் அறிவுரை
துபாய்: பஹ்ரைனில் வேலை பார்க்கும் இந்தியத் தொழிலாளர்கள், உள்ளூர் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். ஸ்டிரைக் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று இந்திய தூதர் பாலகிருஷ்ண ஷெட்டி அறிவுறுத்தியுள்ளார்.
பஹ்ரைனில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டங்களை இந்தியத் தூதரகம்தான் தூண்டி விட்டு வருவதாக பஹ்ரைன் நிறுவனங்கள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் இதை இந்தியத் தூதரகம் கடுமையாக மறுத்துள்ளது.
இந்த நிலையில், பஹ்ரைனில் பணியாற்றி வரும் இந்தியத் தொழிலாளர்களுக்கு இந்திய தூதர் பாலகிருஷ்ண ஷெட்டி அறிவுரை வழங்கியுள்ளார். ஸ்டிரைக்கில் ஈடுபட வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஹ்ரைனில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களை இந்தியத் தூதரகம் தூண்டி விடவில்லை. இந்த விவகாரத்தில் இந்தியத் தூதரகத்திற்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லை.
பஹ்ரைன் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். ஸ்டிரைக் செய்வது பஹ்ரைனில் சட்டவிரோதம். எனவே அவற்றை தவிர்க்க வேண்டும் என்றுதான் இந்தியத் தொழிலாளர்களுக்கு தூதரகம் அறிவுரை வழங்கி வருகிறது. கண்டிப்புடனும் கூறியுள்ளது.
தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வசதியாக குறை தீர்ப்புக் குழுவை பஹ்ரைன் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மஜீத் அல் அலாவி அமைத்துள்ளார். இதை இந்திய தூதரகம் வரவேற்கிறது. இதன் மூலம் அமைதி ஏற்பட வழி பிறக்கும்.
பஹ்ரைன் அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. மனிதாபிமான அடிப்படையில் இந்தியத் தொழிலாளர்கள் மட்டுமல்லாது அனைத்து நாட்டுத் தொழிலாளர்களின் குறைகளையும் தீர்க்க பஹ்ரைன் அரசு நடவடிக்கை எடுக்க முன்வந்திருப்பது வரவேற்புக்குரியது என்று அவர் கூறியுள்ளார்.