இன்று முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்
டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது.
இந்த ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் என்பதால் இதைத் துவக்கி வைத்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரையாற்றுகிறார்.
நாளை (செவ்வாய்க்கிழமை) ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்கிறார். 29ம் தேதி பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்கிறார்.
ரயில்வே பட்ஜெட்டில் லாலு பிரசாத் வழக்கம்போல, பயணிகளுக்கு பல்வேறு சலுகைகள், மாநிலங்களுக்கு ஏராளமான புது ரயில்கள், புதிய ரயில்வே திட்டங்களை அறிவிப்பார் எனத் தெரிகிறது. கட்டணத்தை மேலும் அவர் குறைக்கவும் கூடும்.
இதைத் தொடர்ந்து 29ம் தேதி மத்திய பொது பட்ஜெட்டை ப.சிதம்பரம் தாக்கல் செய்கிறார். அவர் வழக்கம்போல் நாட்டில் வருமான வரி கட்டும் வெறும் 3 சதவீதம் மக்களை மீண்டும் பிழிந்தெடுப்பார் என்பது நிச்சயம்.
இந்தக் கூட்டத் தொடரில் விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, அணு சக்தி ஒப்பந்தம், சேது சமுத்திர திட்டம், ராமர் பாலம், ராஜ் தாக்கரேவால் ஏற்பட்டுள்ள சலசலப்பு என பல்வேறு பிரச்சினைகளுடன் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்த காத்திருக்கின்றன.
குறிப்பாக ராஜ் தாக்கரே விஷயத்தை லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளமும், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சியும் பெரிய அளவில் கிளப்ப காத்திருக்கின்றன.
இதேபோல அணு சக்தி விவகாரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகிய பிரச்சினைகளை இடதுசாரிகள் பெரிய அளவில் கிளப்ப ஆயத்தமாக இருப்பதால் வழக்கம் போல இந்தக் கூட்டத் தொடரும் புயல் வீசும் களமாகவே இருக்கும் என்று தெரிகிறது.
பட்ஜெட் கூட்டத் தொடர் 3 மாதங்களுக்கு நடைபெறும். மார்ச் 9ம் தேதி கூட்டத் தொடர் முடிவடைகிறது.