ஸ்டிரைக் வாபஸ்-ஆனாலும் வங்கிகள் மூடல்!
சென்னை: இன்று முதல் இரண்டு நாட்களுக்கு மேற்கொள்ள இருந்த வேலை நிறுத்தத்தை பொதுத்துறை வங்கி ஊழியர் சங்கங்கள் ஒத்தி வைத்தாலும் சென்னைப் புறநகரில் பல வங்கிகள் மூடிக் கிடந்ததால் மக்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.
ஊதிய உயர்வு, சிறு வங்கிகளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கக் கூடாது, வங்கிப் பணிகளை அவுட்சோர்சிங் செய்யக் கூடாது, ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், இயற்கையான முறையில் மரணமடையும் ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை தர வேண்டும் என்ற கோரிக்கைககளை முன் வைத்துள்ளனர் வங்கி ஊழியர்கள்.
இதை வலியுறுத்தி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் அதிகாரிகளும், ஊழியர்களும் இன்றும் நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருந்தனர்.
இதையடுத்து மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கியது. மத்திய அரசின் சார்பில் இந்திய வங்கிகள் சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தின.
இதில் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்க இந்திய வங்கிகள் சங்கம் முன் வந்தன. இதைத் தொடர்ந்து வங்கி ஊழியர் போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை நகருக்குள் உள்ள பல்வேறு வங்கிகள் இன்று காலை சற்று தாமதமாக திறக்கப்பட்டு செயல்பட ஆரம்பித்தன.
ஆனால் சென்னைப் புறநகரில் நிலைமை தலைகீழாக இருந்தது. தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு புறநகர்ப் பகுதிகளில் பெரும்பாலான வங்கிகள் மூடிக் கிடந்தன. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, கனரா வங்கி என பல்வேறு அரசு வங்கிகள் மூடிக் கிடந்தன. அவற்றில் ஒரு சில ஏடிஎம் மையங்கள் செயல்பட்டன. ஆனால் பெரும்பாலான ஏடிஎம் மையங்களும் செயல்படவில்லை.
ஸ்டிரைக் வாபஸ் என்ற அறிவிப்பால் இன்று வங்கிகளுக்கு வந்த பொதுமக்கள், அவை மூடிக் கிடந்ததால் பெரும் அதிருப்தி அடைந்தனர்.