இந்திய தேர்தல் வரலாற்றில் சாதனை படைத்த திரிபுரா
அகர்தலா: சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் 91.86 சதவீதம் பேர் வாக்களித்தன் மூலம் நாட்டின் தேர்தல் வரலாற்றில் பெரும் சாதனையைப் படைத்துள்ளது திரிபுரா.
கடந்த 23ம் தேதி நடந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 91.86 சதவீதம் பேர் வாக்களித்தனர். இந்திய தேர்தல் வரலாற்றிலேயே இவ்வளவு அதிகமாக இதுவரை வாக்குகள் பதிவானதில்லை.
சில வாக்குச் சாவடிகளில் 99 சதவீதம் அளவுக்கும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதற்கு முன் சிக்கிம் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த தேர்தலில் 86 சதவீத வாக்குகள் பதிவாயின. அது தான் இதுவரை சாதனை அளவாக இருந்து வந்தது.
இப்போது இந்த சாதனையை திரிபுரா முறியடித்துவிட்டது. அதிலும் தேர்தல் மிக அமைதியாக எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.
100 சதவீதம் தேர்தல் அடையாள அட்டைகளைக் கொண்டே தேர்தல் நடத்தப்பட்டதும் குறி்ப்பிடத்தக்கது. கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் சில இடங்களில் 5 மணிக்குள் வரிசையில் நின்றவர்கள் இரவு 11.30 வரை வாக்களித்துள்ளனர். இதுவும் ஒரு சாதனையாகும்.
இத் தேர்தலில் காங்கிரசுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவியது.