கியூபா அதிபராக காஸ்ட்ரோ தம்பி ரவுல் காஸ்ட்ரோ தேர்வு

1959ம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோ தலைமையில் ஏற்பட்ட புரட்சியைத் தொடர்ந்து சர்வாதிகாரி பாடிஸ்டுடாவின் ஆட்சி அகற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து பிடல் காஸ்ட்ரோ கியூப அதிபரானார். அன்று முதல் கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து கியூபாவின் அசைக்க முடியாத தலைவராக விளங்கி வந்தார் பிடல்.
அமெரிக்காவின் பல்வேறு தடைகள், கொலை முயற்சிகள் (கிட்டத்தட்ட 600 முறை என்கிறார்கள்), பொருளாதாரத் தடை ஆகியவற்றைத் தாண்டி இரும்பு மனிதராக கியூபாவை வழி நடத்தி வந்தார் பிடல்.
மருத்துவம், சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் கியூபாவை பெருமளவில் முன்னேற்றியவர் பிடல். கல்வி அறிவில் கியூபா கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கும் மேல் திகழ்கிறது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை சமாளித்து கியூபாவை சிறப்பாக கொண்டு சென்ற பிடலுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதையடுத்து 2006ம் ஆண்டு அவர் ஆட்சிப் பொறுப்பை தனது தம்பி ரவுல் காஸ்ட்ரோவிடம் தற்காலிகமாக ஒப்படைத்தார். ராணுவத் தலைமைத் தளபதி பொறுப்பிலிருந்தும் விலகினார்.
இந்த நிலையில் சமீபத்தில் 50 ஆண்டு கால பொது வாழ்க்கையிலிருந்து நிரந்தரமாக விலகிக் கொண்டார் பிடல். இதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் கூட்டத்தில் அடுத்த அதிபராக ரவுல் காஸ்ட்ரோவை நிறுத்த தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து அதிபராக ரவுல் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து அவர் அதிபராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் ரவுல் பேசுகையில், பிடல் காஸ்ட்ரோவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவரது கொள்கைகளை தொடர்ந்து கடைப்பிடிப்போம். அவரது வழியில் செயல்படுவோம்.
அரசின் முக்கிய முடிவுகளும், நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பான முக்கிய முடிவுகளும் பிடல் காஸ்ட்ரோவை கலந்து ஆலோசித்த பிறகே எடுக்கப்படும் என்றார்.
ரவுல் காஸ்ட்ரோவுக்கு, வெனிசூலா அதிபரும், அமெரிக்காவின் பரம எதிரியுமான சாவேஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications