நீதிபதிகள் நியமன முறையை மாற்ற கி.வீரமணி கோரிக்கை
சென்னை: உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமன முறையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உச்ச நீதிமன்றத்தில் தற்போதுள்ள 26 நீதிபதிகளில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் மட்டுமே நீதிபதியாக உள்ளார்.
தற்போது நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜியம்' முறையில் மூத்த 3 நீதிபதிகளே முடிவு செய்யும் முறை உள்ளது. இது மாற்றப்படவேண்டும்.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி பிரதமருக்கும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்திக்கும், கடிதம் எழுதியோ அல்லது தொலைபேசியில் பேசியோ உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமன முறையில் மாற்றம் கொண்டுவர வற்புறுத்த வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் மார்ச் 8ம் தேதி திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
துபாயில் வீரமணி:
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அமீரகத் தமிழர்கள் அமைப்பின் ஏழாவது ஆண்டு துவக்க விழாவில் பங்கேற்க துபாய் சென்ற வீரமணிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பில் துபாய் அமீரக தமிழர்கள் அமைப்பின் கௌரவ தலைவர் அஜ்மான் மூர்த்தி, தலைவர் அமுதரசன், சைபுதீன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அமீரகத் தமிழர்கள் அமைப்பின் ஏழாம் ஆண்டு துவக்க விழா, அமீரகத்தில் சமூக சேவையில் விருது பெற்றவர்களை கௌரவப்படுத்தும் விழா ஆகியவை வரும் வியாழக்கிழை துபாய் இந்தியன் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஷேக் ராஷித் உள்ளரங்கில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் நடிகர் சத்யராஜ், பின் பக்கீத் குழும நிறுவனங்களின் தலைவர் சுல்தான் அப்துல்லாஹ் பக்கீத் அல் மத்ரூஷி, குடந்தை அன்பு மருத்துவமனை நிறுவனர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
செல்வி தாருணி சீனிவாசனின் கலாச்சார நடனம், வாள்சண்டை, சிலம்பம், கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நடன நிகழ்ச்சிகள் ஆகியவையும் நடைபெற உள்ளன.
மேலதிக விபரங்களுக்கு அமுதரசனை 050 4547201 எனும் இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications