பறிபோன விஞ்ஞான விரல்- வைரமுத்து இரங்கல்
சென்னை: சுஜாதா என்கிற விஞ்ஞான விரலை மரணம் பறித்துக் கொண்டு விட்டது. ஆனால் அதன் ரேகைகள் அழிவதில்லை என்று எழுத்தாளர் சுஜாதாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு
எழுத்தாளர் சுஜாதாவின் மரணச் செய்தி கேட்டு சில நிமிடங்கள் உறைந்து போனேன்.
சிவாஜி வெள்ளி விழா மேடையில்தான் அவரை இறுதியாகச் சந்தித்தேன். மரணத்திற்கும் அவருக்கும் சில வார இடைவெளிதான் என்பதெல்லாம் எனக்கு அப்போது தெரியவில்லையே.
ஒரு கடல் சட்டென்று உள் வாங்கி விட்டதைப் போல உணர்கிறேன்.
அவர் பெருமைகள் உள்ளத் திரையில் ஒவ்வொன்றாக ஓடி மறைகின்றன.
அவர் விஞ்ஞானிளின் எழுத்தாளர், எழுத்தாளர்களின் விஞ்ஞானி.
கணிப்பொறி அறிவு மூலம் தமிழுக்கு நவீன நாவு தந்து பேச வைத்தவர். கவிதைப் பறவைகளின் வேடந்தாங்கலாய் விளங்கியவர். நாடு வியந்த நட்சத்திர எழுத்தாளர். தமிழின் அத்தனை வடிவங்களையும் ஆண்டு பார்த்தவர்.
மரணம் தமிழின் விஞ்ஞான விரலை பறித்து விட்டது. ஆனால் விரலின் ரேகைகள் அழிவதில்லை.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இலக்கிய நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வைரமுத்து.












Click it and Unblock the Notifications