சாராயத்தை ஒழிக்க வேண்டும்- ராமதாஸ்
கரூர்: ஏழைக மக்களை பாதிக்கும் சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மது ஒழிப்புப் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கரூரில் பேசினார்.
அப்போது, மக்களை பாதிக்கும் சாராயத்தை அரசு ஒழிக்க வேண்டும். ஏழைகள், கூலித்தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோர்தான் இன்று அதிகம் குடிக்கின்றனர். மது குடிக்கும் இளைஞர்கள் வசதி படைத்தவர்களா இதை அரசு அறிவிக்க தயாரா.
ஒரு மதுக் கடையை தேர்வு செய்து அதில் குடிக்க வருபவர்கள், வாங்கிச் செல்வபர்கள் பற்றி ஒரு சர்வே எடுக்க வேண்டும். அதில் வசதி படைத்தவர்கள் மட்டுமே குடிக்க வருதாக தெரிவித்தால் நான் என்னுடைய கொள்கையை கைவிடுகிறேன்.
ஜனவரி 1 ம் தேதி அன்று ஒரே நாளில் ரூ 100 கோடிக்கு குடிக்கின்றனர் என்பதே ஒரு வகையான சுரண்டல் தான்.
மக்களுக்கு தொல்லை தரும் மதுக்கடைகளை மூட மாவட்ட கலெக்டருக்கு அரசு அதிகாரம் தர வேண்டும் என்றார்.
தள்ளாடும் அரசு:
முன்னதாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள காந்தி சிலை அருகே ராமதாஸ் பேசுகையில், இந்த பயணம் அரசியல் ரீதியானதல்ல. பத்து ஆண்டுகளாக மது விலக்கு கொள்கை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தியுள்ளோம். குடியால் குடும்பங்கள் அழிகின்றன. நாட்டின் உற்பத்தி குறைகிறது. மருத்துவச் செலவு அதிகரிக்கிறது.
எந்த மதமும் குடிக்க சொல்லவில்லை. கல்வியை தனியாரிடம் கொடுத்து விட்டு மதுவை அரசே நடத்துவது என்ன நியாயமோ?. தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த முதல்வரிடம் கோரியுள்ளேன்.
கடந்த ஆட்சியில் 4 ஆயிரம் கடைகளை 8 ஆயிரமாக உயர்த்தினர். மீண்டும் கடைகளை 4 ஆயிரமாக குறைக்கலாம். காலை 10 மணிக்கு திறந்து 3 மணி நேரம் மட்டும் வியாபாரம் செய்யலாம். சனி, ஞாயிறு விடுமுறை விடலாம். தேர்தல் வந்தால் 15 நாட்கள் விடுமுறை விடலாம்.
மது விலக்கால் கள்ளச்சாராயம் வராமல் இருக்கவும், அரசின் வருவாய் இழப்பில்லாமல் இருக்கவும் என்னிடம் திட்டங்கள் உள்ளன. இரண்டு ஆண்டுகளாக நான் கூறுவதை அதிகாரிகள் கேட்கவில்லை. மதுக் கொள்கையில் அரசு தள்ளாடுகிறது. மக்கள் விரும்பினாலும் அரசு பூரண மதுவிலக்கை கொண்டு வர தயாராயில்லை என்றார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த பொது கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், திருவள்ளுவர் போன்ற பெரிய மகான்களை பின்பற்றுவதாக கூறுபவர்கள் அவர்களின் கொள்கைகளை மட்டும் பின்பற்ற மறுத்து வருகின்றனர். எந்த மகானும் மதுவை ஆதரிக்கவில்லை என்பது ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சேம நல அரசு என்பது மக்கள் நலனை கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால் இங்கோ குடி குடியை கெடுக்கும் என எழுதி வைத்து விட்டு உள்ளே ஊற்றி கொடுத்து கொண்டிருக்கின்றனர். இதற்கு பதிலாக அரசு குடியை கெடுக்கும் என்றே எழுதி வைத்து கொள்ளலாம்.
பலரது வாழ்க்கையை அழிப்பதால் மதுவை அரக்கன் என்று சொல்கிறோம். தற்போது அதே வேலையை அரசே செய்து கொண்டிருப்பதால் அரசு அரக்கனாக மாறி வருகிறது என்று தான் பொருள். இன்று சாராய விற்பனையில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என்றார் ராமதாஸ்.