பாவூரில் பரவும் வாந்தி-பேதி: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி
பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் அருகே வாந்தி பேதி பரவி வருகிறது. இதுவரை 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கீழப்பாவூர் ஓன்றியம் பூலாங்குளத்தில் 2 மாதத்திற்கு முன்பு வாந்தி பேதியால் பலர் பாதிக்கப்பட்டனர். இதில் ராணி என்பவர் இறந்தார்.
இந்நிலையில் மீண்டும் இப் பகுதியில் திடீரென வாந்தி பேதி பரவியுள்ளது. பூலாங்குளத்தை சேர்ந்த சுப்பிரமணியன், அவரது மனைவி ராமலெட்சுமி, சீதாலெட்சுமி, செல்வகனி, பொன்னம்மாள், பாப்பா உள்ளிட்ட 12 பேர் பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் சினைந்தபெருமாள் என்பவர் தென்காசி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனு்மதிக்கப்பட்டார். பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் திருமலையப்பன் தலைமையில் மருத்துவ குழுவினர் பூலாங்குளத்தில் முகாமிட்டு வாந்தி பேதி பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.