புதிய அரசியல் கட்சியை உருவாக்கும் தமுமுக
தஞ்சாவூர்: தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், தனது பெயரை மாற்றிக் கொண்டு புதிய அவதாரம் எடுக்கிறது. தேர்தலிலும் போட்டியிட தீர்மானித்துள்ளது.
தமுமுக எனப்படும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் நடைபெற்றது.
தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மாநில துணைச் செயலாளர்கள், மாநில அணி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
தமுமுகவை பெயர் மாற்றத்துடன் அரசியல் கட்சியாக மாற்றுவதா அல்லது தமுமுகவின் வழிகாட்டலில் புதிய அரசியல் கட்சியை உருவாக்குவதா என ஆலோசனை நடந்தது.
இறுதியில் புதிய அரசியல் கட்சியை உருவாக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய அரசியல் கட்சி முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோர் இணைந்து பணியாற்றும் வகையில் முழுமையான ஜனநாயக கட்சியாக செயல்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூடுதலாக ஆய்வு செய்யவும், தமுமுகவுக்கும், புதிய அரசியல் கட்சிக்குமான உறவை திட்டமிடுவதற்கும், அமைப்பு நிர்ணய சட்டத்தை உருவாக்குவதற்கும் ஜவாஹிருல்லாஹ் தலைமையில் அரசியல் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் மாநிலச் செயலாளர்கள் அப்துஸ் ஸமது, மௌலானா நாசர், மாநிலத் துணைச் செயலாளர் ஹாஜா கனி. மாநில தொழிலாளர் அணிச் செயலாளர் அவுலியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த ஐவர் குழு மார்ச் 31ம் தேதிக்குள் தனது அறிக்கைகளை சமர்ப்பிக்கும். அந்த அறிக்கைகள் குறித்து தலைமை நிர்வாகக்குழு இறுதி முடிவெடுக்கும்.