Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடும் மின் தட்டுப்பாடு-தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒருமுறை விடுமுறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நிலவும் மின்சாரத் தட்டுப்பாட்டைப் போக்குவரத்து குறித்து இப்போதுதான் தமிழக அரசு வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் மின்வெட்டால் பயங்கரமாக தத்தளித்து வரும் நிலையில் அதை சமாளிக்க புதிய திட்டம் ஒன்றை மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிவித்துள்ளார்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை மின்வெட்டு இல்லாத ஊரே இல்லை என்ற நிலையில் தமிழகம் பெரும் தத்தளிப்பில் உள்ளது. எப்போது கரண்ட் போகும் என்று கூறவே முடியாத அளவுக்கு ஒரு நாளைக்கு ஐந்து முறை, ஆறு முறை கூட மின்சார வினியோகம் தடைபடுகிறது.

நேரம் காலம் பார்க்காமல் காலையில் மின்வெட்டு, மதியம், மாலை, இரவு என சகல நேரங்களிலும் சகட்டு மேனிக்கு மின்வெட்டு ஏற்பட்டு மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறையே இல்லை என்று அரசு சில மாதங்களுக்கு முன்பு வரை கூறி வந்தது. ஆனால் அப்போதுதான் மின்வெட்டு அதிக அளவில் இருந்தது.

இந் நிலையில் மின்பற்றாக்குறை இருப்பதை அரசு பகிரங்கமாக ஒத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளது. மின் பற்றாக்குறையை சமாளிக்க தமிழகத்தை 6 மண்டலங்களாகப் பிரித்து அந்தந்த மண்டலத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு முறை விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

மின் வெட்டை சமாளிப்பது பற்றி, தொழில் அதிபர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை கோட்டையில் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, கூட்டம் முடிந்த பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறுகையில், மின்சார பற்றாக்குறையை சரி செய்வதற்காக அனைத்து தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தி சில முடிவுகள் எடுக்கப்பட்டன. உச்சகட்ட மின் தேவையை சமாளிப்பதற்காக காடம்பாறையில் உள்ள மின்நிலையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் 400 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த 4 நாட்களாக இதை உற்பத்தி செய்ய முடியவில்லை.

நீர் இறைப்பதற்கு 49.5 என்ற யுனிட் அளவில் தென் இந்திய மின் தொகுப்பை தமிழகம் பயன்படுத்தி வந்தது. ஆனால் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் அதை 49.2 யுனிட் அளவில் இப்போது பயன்படுத்துவதால், தமிழகம் 400 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போய்விட்டது.

எனவே, உச்சகட்ட மின் தேவை ஏற்படும் காலங்களில், சொந்த மின் உற்பத்தி இருந்தால் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தொழிலதிபர்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.

இதனால், மாலை நேரங்களில் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும். மார்ச் மாதத்தில் மாணவர்களுக்குத் தேர்தல் இருப்பதால், கிராமம் முதற்கொண்டு அனைத்து பகுதிகளிலும் இரவு நேரத்தில் மின்சாரம் வழங்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தை 6 தொழில் மண்டலங்களாகப் பிரித்திருக்கிறோம். அந்தந்த மண்டலங்களில் வரும் தொழிற்சாலைகள் குறிப்பிட்ட வேலை நாளில் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலதிபர்களைக் கேட்டுக்கொண்டோம்.

தமிழகத்தின் ஒட்டுமொத்த நன்மையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை தொழிலதிபர்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.

அதன்படி, சென்னை தெற்கு மண்டலத்திற்குள் வரும் தொழிற்சாலைகள் திங்கள் கிழமையிலும், சென்னை வடக்கு மண்டலம் செவ்வாய் கிழமையிலும், ஈரோடு-விழுப்புரம் மண்டலம் புதன்கிழமையிலும், நெல்லை-வேலூர் மண்டலம் வியாழக் கிழமையிலும், மதுரை-திருச்சி மண்டலம் வெள்ளிக் கிழமையிலும், கோவை மண்டலம் சனிக்கிழமையிலும் விடுமுறை விட வேண்டும்.

இந்த விடுமுறை நாள் போக மற்ற நாட்களில் அந்தந்த மண்டலங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு எந்த வித மின் தடையும் இல்லாத வகையில் மின்சாரத்தை மின்சார வாரியம் வழங்கும். அரசுடனான இந்த ஒத்துழைப்புக்காக சில சலுகைகளை தொழிலதிபர்கள் கேட்டுள்ளனர்.

மின்சாரம் அதிகம் தேவைப்படும் உச்சகட்ட நேரத்தில் பொருள் உற்பத்தியை 30 சதவீதம் குறைத்துக் கொள்வதாகத் தெரிவித்தனர். அதற்கு ஈடாக கட்டணத்தை அரசு குறைக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

மேலும், எரிகலனுக்கு (பர்னேஸ்) தேவைப்படும் எண்ணைக்கு வாட்' வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். கடந்த முறை இதுபோல் வாட் வரி விலக்கு தொடர்பாக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

உச்சகட்ட மின்தேவை ஏற்படும் நேரத்தில் மின் உற்பத்திக்காக ஜெனரேட்டரை உபயோகிக்கும்படி தொழிலதிபர்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம். அதிகபட்சமாக 2 மாதங்களுக்கு அதை உபயோகிக்கலாம். இதற்கு அவர்கள் சம்மதித்துள்ளனர். இதனால் நாளொன்றுக்குச் செலவாகும் மின்சாரத்தில் 300 மெகாவாட் மின்சாரம் குறையும். கோடை காலத்தில் 600 மெகாவாட் மின்சார பற்றாக்குறை ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

எல்லா இடங்களிலும் பற்றாக்குறைதான்:

எனவே அசாம், மேற்குவங்காளம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கத் திட்டமிட்டு இருக்கிறோம். இதுகுறித்து வர்த்தக கழகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறோம். மார்ச் மாதன் 300 மெகாவாட்டும், ஏப்ரல் மாதம் 400 மெகாவாட்டும் வாங்கப்படும்.

மின்பற்றாக்குறை இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. டெல்லியில் 6 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. பெங்களூரிலும் சில மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. ஆந்திராவில் விவசாயிகளுக்கு பகலில் மின்சாரம் வழங்குவதில்லை. தமிழகத்தில்தான் பகலில் 6 மணி நேரமும், இரவில் 8 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்குகிறோம்.

காற்று வந்தால் கரண்ட் வரும்:

மே 15ம் தேதியில் இருந்து காற்று வீசத் தொடங்கி விடும் என்று நம்புகிறோம். அதன் பிறகு காற்றாலைகள் மூலம் 1,200 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். எனவே, டிசம்பர் மாதம் வரை மின் பற்றாக்குறை இருக்காது.

பொருள் உற்பத்தி தொழிற்சாலைகள் போல் சினிமாத் தியேட்டர் அதிபர்களை கேட்டுக் கொள்ள விரும்பவில்லை. சினிமா தியேட்டர்களுக்கு மின்சாரம் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு வகுத்தால், நல்ல படம் பார்க்க வந்தேன், மின்சாரத்தை தடை செய்து விட்டது அரசு என்று மக்கள் குறை கூறுவார்கள். எல்லா தரப்பினரையும் பகைத்துக் கொள்ள அரசு விரும்பவில்லை என்றார் வீராசாமி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+