நில ஆக்கிரமிப்பு: விஜய்காந்த்துக்கு நில ஆணையர் நோட்டீஸ்
சென்னை: அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளது தொடர்பாக தேமுதிக தலைவர், நடிகர் விஜயகாந்த்துக்கு நிலச் சீர்திருத்தப் பிரிவு இணை ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ளது முள்ளி, விளாகம், முருக்கஞ்சேரி, அருங்குணம், தேவாதூர் ஆகிய கிராமங்கள். இந்த கிராமங்களில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் நிலம் வாங்கிப் போட்டார். அது 402.24 ஏக்கர் அளவில் உள்ளது.
இந்த நிலத்தில் கோவில், அரசு புறம்போக்கு மற்றும் தனியாருக்குச் சொந்தமான 38.62 ஏக்கர் நிலம் உள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்த சர்ச்சையைக் கிளப்பியவர் தேவாதூர் கிராம ஊராட்சி துணைத் தலைவர் மீனா ஜெயராமன்.
சர்ச்சைக்குரிய நிலத்தைச் சுற்றிலும் வேலி அமைத்துள்ள விஜயகாந்த் கேப்டன் பண்ணை என்று அந்த இடத்திற்குப் பெயர் சூட்டியுள்ளார். இந்த கேப்டன் பண்ணை பிரைவேட் லிமிட்டெட் என்கிற நிறுவனத்தில் விஜயகாந்த்தும், அவரது மனைவி பிரேமலதாவும் இயக்குநர்களாக உள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து மதுராந்தகம் தாசில்தார் விசாரணை நடத்தினார். பின்னர் பொதுப்பணித்துறையினரும் அங்கு ஆய்வு நடத்தினர். இதன் அடிப்படையில் விஜயகாந்த்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 15 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பு நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.
இந் நிலையில் புதிதாக நிலச் சீர்திருத்த இணை ஆணையர், விஜயகாந்த், பிரேமலதாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் ஏன் உங்களது நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என்று கேட்டுள்ளார் ஆணையர்.
விழுப்புரத்தில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் 11ம் தேதி விசாரணை நடத்தப்படவுள்ளது. அப்போது நேரிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலமாகவோ ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் விஜயகாந்த்துக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் பண்ணை விவகாரத்தில் மேலும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளதால், பண்ணை தப்புமா அல்லது ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்துக்கு ஏற்பட்ட கதி ஏற்படுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications