பழனி பள்ளிக்கூட வளாகத்தில் டெட்டனேட்டர்கள்
பழனி: பழனி அருகே பள்ளிக் கூட வளாகத்தில், டெட்டனேட்டர்கள் குவியலாக கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி அருகே உள்ள சப்பளநாயக்கன்பட்டியில் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக ராணி என்பவர் உள்ளார்.
நேற்று பள்ளிக்கு விடுமுறையாகும். காலை 9 மணிக்கு பள்ளிக்கூடத்திற்கு வந்த தலைமை ஆசிரியை ராணி, பள்ளி வளாகத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பள்ளிக்கூட சுற்றிப் போடப்பட்டிருந்த முள் வேலியில் வயர்களுடன் ஏதோ கிடந்ததைப் பார்த்தார்.
அது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஊர் மக்களும் கூடி விட்டனர். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் சின்னச்சாமி வந்தார். அப்போதுதான் அது டெட்டனேட்டர் என்று தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்தனர். முள் வேலியையொட்டியுள்ள பகுதியில் தீவிரமாக சோதனையிட்டதில் மொத்தம் 30 டெட்டனேட்டர்கள் சிக்கின.
இவற்றை ஜெலட்டின் குச்சிகளோடு சேர்த்தால் பெரும் நாசத்தை ஏற்படுத்தம். பாறைகளை உடைக்க இந்த டெட்டனேட்டர்கள் பயன்படுத்துவது வழக்கம். இதை யார் இங்கே கொண்டு வந்து போட்டது என்று தெரியவில்லை.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.