சோனியா தலையீடு: கருணாநிதி-மாறன் சகோதரர்கள் சமரசம்?
மாறன் சகோதரர்கள்-அழகிரி மோதலைத் தொடர்ந்து இரு தரப்பும் ஒருவரை ஒருவர் சந்திப்பதையே தவிர்த்து வந்த நிலையில், இப்போது தான் முதன் முறையாக ஸ்டாலினை சந்தித்துள்ளார் கலாநிதி.
கருணாநிதியுடன் கலாநிதி சந்திப்பு:
முன்னதாக முதல்வர் கருணாநிதியையும் கலாநிதி மாறன் சந்தித்துப் பேசினார். கருணாநிதியின் சிஐடி காலனி இல்லத்தில் இச் சந்திப்பு நடந்தது. முதல்வரிடம் பேசிய பின்னர் ஸ்டாலின் வீட்டுக்கு சென்றார் கலாநிதி.
சன் டிவிக்கு போட்டியாக கலைஞர் தொலைக்காட்சியை உருவாக்கிய கையோடு, சன் டிவியின் சுமங்கலி கேபிள் நெட்வோர்க்கை முடக்க ஹாத்வேயுடன் அழகிரி கைகோர்த்து படு வேகத்தில் களத்தில் இறங்கியுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.
ஸ்டாலினின் பிறந்த தினத்தையொட்டி வேளச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் காலை முதல் தொண்டர்கள், தலைவர்கள் கூட்டம் அலைமோதியது.
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி நின்று இனிப்புகள் வழங்கியும் ஸ்டாலினை வாழ்த்தியும் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். அமைச்சர்கள், மாநிலம் முழுவதும் உள்ள கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்தினர்.
இந் நிலையில் தான் யாரும் எதிர்பாராத விதமாக அங்கு வந்தார் கலாநிதி மாறன். அவரை ஸ்டாலின் குடும்பத்தினர் வரவேற்று அழைத்துச் சென்றனர். நீண்ட நேரம் ஸ்டாலின் குடும்பத்தினருடன் இருந்த கலாநிதியை ஸ்டாலினின் மகன் உதயநிதி கார் வரை வந்து வழியனுப்பி வைத்துவிட்டுச் சென்றார்.
இதன்மூலம் ஸ்டாலின்-மாறன் சகோதரர்கள் இடையிலான மோதல் முடிவுக்கு வந்து கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அழகிரி-மாறன் சகோதரர்கள் மோதல் வெடித்தபோது அண்ணனின் பக்கம் நின்றார் ஸ்டாலின். திமுகவில் அடுத்த முக்கிய தலைவர் யார் என்று கருத்துக் கணிப்பு நடத்தி ஸ்டாலினுக்கு ஆதரவான முடிவை வெளியிட்ட நிலையில், ஸ்டாலின் அவ்வாறு நடந்து கொண்டது மாறன் சகோதரக்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது.
இதையடுத்து அவர்களும் முதல்வர் குடும்பத்திலிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தனர்.
அதிமுகவில் சேரப் போகிறார் தயாநிதி என்று கூட செய்திகள் வந்தன. ஆனால், காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் அவரது மகனும் தனது நெருங்கிய நண்பருமான ராகுல் காந்தியையும் சமீபத்தில் சந்தித்துப் பேசிவிட்டு வந்தார் தயாநிதி.
இதையடுத்து மூத்த காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி சென்னைக்கு வந்து கருணாநிதியை சந்தித்தார்.
இதனால் கருணாநிதி-மாறன் குடும்பத்து பூசலை நீக்குவதில் சோனியாவி்ன் தலையீடும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கருணாநிதி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ள சோனியா, அவர் கேட்கும் திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார். சேது சமுத்திர திட்ட விவகாரத்தில் தேசிய அளவில் பாதிப்பு வரக் கூடும் என்று தெரிந்தும் திமுகவின் நிலைக்கு ஆதரவாக நின்று வருகிறார் சோனியா.
அதே நேரத்தில் அமைச்சராக தயாநிதி செயல்பட்ட விதம் சோனியா-ராகுல் குடும்பத்தை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் ராகுலுக்கும் தயாநிதி மிக நெருக்கமானார்.
இதனால் திமுக-மாறன் குடும்ப மோதலால் மிகவும் வருத்தத்தில் இருந்தார் சோனியா. இப்போது திமுக தரப்பிடம் பேசி இருவரையும் மீண்டும் நெருங்கச் செய்ததிலும் சோனியாவின் பங்கு இருக்கலாம் எனத் தெரிகிறது.