ஜீவா படத்திற்கு அவமதிப்பு-சிபிஎம் போராட்டம்
தூத்துக்குடி: மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவின் படம் குப்பைக் கிடங்கில் போடப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து தூத்துக்குடி நகராட்சி கமிஷனர் அலுவலகத்தை வரும் 4ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான மறைந்த ஜீவானானந்தத்தின் புகைப்படம் தூத்துக்குடி நகராட்சி கூட்ட அரங்கில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது அதனை அகற்றி அதிகாரிகள் குப்பை கிடங்கில் போட்டுள்ளனர்.
மாபெரும் தலைவரின் புகைப்படத்தை போற்றுவதற்கு பதிலாக அகற்றி குப்பை கிடங்கில் போட்ட செயல் தூத்துக்குடியில் கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இச்செயலைக் கண்டித்து தூத்துக்குடி நகராட்சி அலுவலகத்தை வரும் 4ம் தேதியன்று காலையில் முற்றுகை போராட்டம் நடத்த மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது.