பிளஸ் டூ தேர்வுகள் நாளை தொடக்கம்
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் (திங்கட்கிழமை) பிளஸ் டூ தேர்வுகள் தொடங்குகின்றன. இந்தத் தேர்வுகள் 24ம் தேதி முடிவடைகின்றன.
இந்த ஆண்டு 6.6 லட்சம் மாணவ-மாணவிகள் பிளஸ் டூ தேர்வு எழுதுகின்றனர். இதற்காக1,650 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதே போல மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் வரும் 25ம் தேதி தொடங்குகின்றன.
பறக்கும் படைகள்:
மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 9,000 பேர் இந்த பறக்கும் படைகளிடம் இடம் பெற்றுள்ளனர்.
காப்பி அடித்தல், ஆள் மாறாட்டம் செய்தல் ஆகிய செயல்களில் இறங்குவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வினாக்களை படிக்க தனியாக 10 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பத்தாம் வகுப்பு:
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு 27ம் தேதி தொடங்குகிறது.